About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 6 மார்ச், 2023

எது சுமை?

வீடு மனைவி மக்கள் செல்வம் என எல்லா உடைமைகளையும் உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது என்கிறது இந்தப்படம். இந்தத் தத்துவம் உண்மை என்றாலும் நிஜவாழ்க்கையில் சாத்தியம் இல்லை. மூட்டைகளை ஏன் சுமக்க வேண்டும்? இந்தச் சுமைகள் வேண்டாம் என ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொண்டால், சங்கடங்கள் வராது. ஆனால் சமூகம் அப்படி விடாது, கட்டாயப்படுத்தும். அப்படியான சுமைகளை ஏற்றிவிட்டு இப்படியான ஓர் உபதேசத்தைத் தந்தால் அவன் என்ன செய்வான்? ஐயோ பாவம்! அவன் ஜாதகத்திலே சன்னியாசி யோகம் போன்றதொரு அமைப்பு இருந்தால் தப்பித்தான். ஆனால் அது எல்லோருக்கும் வாய்க்காது.

ஒரு நடுத்தர குடும்பஸ்தன் மூட்டைகளை உதறுவது எப்போது?

* வீட்டிற்கான மாத EMI கட்டவேண்டும், அசலை மொத்தமாக அடைத்தபின்... 

* பொருளீட்டி வைத்து மகனை/மகளைக் கரை சேர்த்த பின் ....

* மனைவியை அம்போவென விடாமல் அவளுக்கான மாதவருவாய் ஏற்படுத்தித் தந்தபின்... 

நடுவில் வேலை பறிபோகாமல் இருந்து மாத சம்பாத்தியம் தொடர்ந்து வந்தால் ஒருவாறு சமாளிக்கலாம். இதெல்லாம் நிறைவேறவே அறுபது வயதாகிவிடும். அப்போது மூப்பினால் சர்க்கரை/ ரத்தக்கொதிப்பு/ மூட்டுவலி எல்லாம் படை எடுத்துவந்து மோதும். மருத்துவச் செலவும் பலகீனமும் ஏற்படும். எல்லாம் தீரும்வரை இறைவனைச் சுமக்க வாய்ப்பே அமையாது. அகக்கடல் உறங்கி அமைதி கொள்வது எப்போது? திடீரென விரக்தியில் உதறிவிட்டு ஓடிப்போனால் உண்டு. ஆனால் அதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும்.

எங்களுக்குத் தெரிந்த ஒரு பாட்டியம்மா, வயது 99. அவர் சில மாதங்களுக்கு முன் இறந்தார். அவருக்கு ஆறு பெண் பிள்ளைகள். சுமார் 60 வருடங்களுக்கு முன் அவருடைய கணவர் பெரிய தொழில் செய்து நொடிந்து போனார். கடன் தொல்லைகளாலும், பெண்களைக் கரை சேர்க்க முடியாத அச்சத்தாலும் வீட்டைவிட்டு ஓடியே போனார். பிறகு காலவோட்டத்தில் தாயும் மகள்களும் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவாறு காலூன்றி நின்றனர். அந்தக் கிழவர் கடைசிவரை வரவில்லை. நான் பார்க்கும்போது கால்கள் பலமிழந்த நிலையில் அந்தப் பாட்டி தரையில் உட்கார்ந்தே நகர்ந்து போவார். வெளியில் எங்கேனும் செல்ல மட்டும் சக்கர நாற்காலி. 

படத்தில் உள்ள சங்கதிபடி மூலவனைச் சுமக்கவே அக்கிழவர் இப்படிச் செய்தார் என்று அன்று நடந்த உண்மை நிலையை அறியாதோர் நினைக்கலாம் அல்லவா?

போகர் தன்னுடைய குரு காலாங்கியின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கையில், "பெண்ணாசை அறுத்துத் தன் மக்களை வெவ்வேறாய்ப் போய் எங்கோ திரியும் என்று விடுத்தார்" என்கிறார்.

பக்தியோகம் தவிர பெருஞ்சித்தர்கள் செய்ததை எல்லாம் நிஜ வாழ்க்கையில் சாமானியர்கள் பின்பற்ற முடியாது‌ என்பதே நிதர்சனம். ஜெனித்தது முதலே இறைவனை ஆன்மரூபமாய்ச் சுமந்துகொண்டுதான் வாழ்கிறோம். உள்ளே ஒருவன் உள்ளான் என்பதை இளம் பிராயம் முதலே உணர்தல் சிறப்பு. நம்முள் குடியிருப்பதால் நம் பாரத்தை அவன்தான் சுமக்கிறான் நாமல்ல என்று நினைத்தால் எதையும் உதறித்தள்ள அவசியமில்லை.

-எஸ்.சந்திரசேகர்



கோட்டை அதிசயங்கள்!

“இலங்கையில் நான்கு தந்தங்களுடன் பெரிய யானை இனங்கள் Gomphotheres இருந்ததா? இராவணனின் தேசத்தில் என்னனென்ன அதிசயங்கள் இருந்தன?” என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

வால்மீகி இராமயணத்தில் சுந்தர காண்டத்தின் சர்கம் 4, பாடல்கள் 4,5 மற்றும் சர்கம் 9 பாடல்கள் 25,26,27 பகுதியில் இராவணனின் கோட்டையைச் சுற்றி அனுமன் பார்த்த அதிசயங்கள் பற்றி விரிவாகக் காணக்கிடைக்கிறது.


“இராவணின் உள்சுற்றுக் கோட்டையில் வீர அனுமன் நுழைந்தான். அது சொர்க்கத்திற்கு நிகராக இருந்தது. குதிரைகள், யானைகளின் ஒலிகள் எதிரொலித்தன, தேர்களில் பூட்டிய உலோக மணிகளின் சப்தமும், ஆகாய விமானங்கள் எழுப்பும் ஓசையும் காதைப் பிளந்தன. நான்கு தந்தங்கள் (சதுர்தந்த), மூன்று தந்தங்கள் (த்ரிதந்த) கொண்ட யானைகளும் காவலுக்கு இருந்தன. அவனுடைய பிரம்மாண்ட கோட்டையின் வாயில் தோரணங்கள் அழகானதாகவும், கோட்டையைச்சுற்றி வலிமையான ராட்சதர்களும், வெளியே கூர்வேல் ஏந்திய வீரர்களும் எந்நேரமும் காவலுக்கு இருந்தனர். உள்ளே பெரிய அளவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது” என்று வால்மீகி இராமாயணம் சொல்கிறது. 

அதை நம் சித்தரின் பாடல்களோடு ஒப்பீடு செய்து பார்ப்பதுதான் சரியாக இருக்கும். திரேதா யுகத்தில் பார்த்ததையெல்லாம் போகர் தன்னுடைய சப்தகாண்டத்தில் உரைக்கிறார். காலாங்கிநாதர் அவருக்கு விளக்கியது போக போகரும் பார்த்த கோட்டை அதிசயத்தை ஆறாம் காண்டத்தில் புலிப்பாணிக்குச் சொல்கிறார். 


“வெகுகோடி காலங்களுக்கு முன் பொன்னிலங்கையின் மன்னன் தசமுக இராவணனின் கோட்டையில் பார்த்த வளமான அதிசயங்கள் மிக்கவுண்டு. தேர் ராஜரின் கோட்டை விண்ணை முட்டும், சண்ட மாருதமும் பிரசண்ட மாருதமும் வீசும் வகையில் கோட்டைக்குள் ஆழியும் வந்து போகும், எழும்பி வடியும் முகத்துவாரமும் உண்டு. அவனுடைய கோட்டையைச் சுற்றி பராகிரம ராட்சதாள் நிறைய பேர் காவலுக்கு இருந்தனர். தூரத்தே வானரர்களும் கண்டேன். தேர்வேந்தனின் அதிசயிக்கும் ரதகஜ தோற்றங்களும் அதன் சப்தங்களும் அதீதமாய் அச்சுறுத்தும் வகையில் இருந்தன” என்று போகர் சொல்கிறார்.

இராமாயணம் அண்மையில்தான் நடந்திருக்கும் என்றோ அது வெறும் கட்டுக்கதை என்றோ பலர் திரித்துச் சொல்லும்போது, வால்மீகியும் போகரும் அது அப்படியல்ல, வெகுகோடி வருடங்களுக்கு முன் திரேதா யுகத்தில் நடந்தது என்று அடித்துச் சொல்வதைக் காட்டிலும் சான்று வேண்டுமோ? தேவபாடையில் இயற்றிய வால்மீகியும், நற்றமிழில் இயற்றிய போகரும் உரைத்த இராவணன் கோட்டையின் அதிசயங்கள் யாவும் பொய்யல்ல மெய்! 

-எஸ்.சந்திரசேகர்

சனி, 18 பிப்ரவரி, 2023

சிவராத்திரி!

மஹாசிவராத்திரிக்கு உங்களுடைய சிறப்புப் பதிவு ஏதேனும் உண்டா என்று நம் நண்பர் கேட்டார். 

அவனை நினைக்காத தருணம் உண்டா என்ன? சீவனில் கலந்து வாசியில் நகர்ந்து சிந்தையில் அமர்ந்து எப்போதும் நம்மை ஆட்கொள்பவன் நம் தேகத்தில் பஞ்சபூதமாய் இருப்பவன். இந்த ஆன்மா அவனுடையது. அதனால் நினைத்தபோது இங்கே பாடல் புனைவது, சித்த நூலிலிருந்து சிலவற்றைப் பதித்து விளக்கம் தருவது, என எப்போதும் அவன் நினைவாகவே இருப்பதால், நமக்குத் தினமும் சிவராத்திரி, ஏகாதசி, கந்தசஷ்டிதான்.

மாலையில் திருநீறு பூசி சிவபுராணம், சிவாஷ்டகம் என எது முடியுமோ அதைப் பாராயணம் செய்வேன். ஜெபமாலை அணிந்து மந்திரம் உருவேற்றுவேன். பிறகு இரவு சாப்பாடு முடித்தபின் நெடுநேரம் கண் விழித்து இருக்காமல் நேரத்தோடு தூங்கப்போவதுதான் என் பாணி! 😂

ஊரே அமர்க்களப்படுகிறது. கோயிலில் விடியவிடிய நான்கு கால பூஜை நடக்கும். ஆனால் இந்த ஆள் என்ன இப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறீர்களோ? 🤔

என்னைப் பொறுத்தவரையில் ...

"தினமும் சந்தியில் பிரதோஷ காலம்

தினமும் இடையாமம் சிவராத்தி ஓரை

தினமும் வைகறையில் நாரணன் நேரம்

தினமும் முப்பொழுதும் நாடலாம் முக்தி"

இங்கே படத்தில் உள்ள ஸ்படிக லிங்கமும் சாளக்கிராமங்களும் என் மூதாதையர் விபூதி சித்தர் தாத்தா 1561-ஆம் ஆண்டு சமாதியில் போய் அமரும்வரை நித்தம் பூசித்தது. 🕉️

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

காம பாணம்!

சமூகவலையில் படத்திலுள்ளபடி ஓர் ஆங்கில வாசகத்தைப் பார்த்தேன். 

இக்காலக் காதலர்கள் பண்டைய காலத்தில் பாரம்பரிய காமன் பண்டிகையைக் கொண்டாடியதுபோல் மாசியில் கொண்டாடுவதுதான் Valentine's Day என்று நினைத்துவிட்டனர். 

இங்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்களே மிக தாராளமாக மனமுவந்து அனுமதி கொடுக்கின்றபோது மற்றவர்களின் கண்டனக் குரல் எடுபடாது. எல்லா வீடுகளிலும் இளசுகள் கையில் ரோஜா எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவதில்லை. வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளை காதலிக்க ஊக்குவித்தது சமத்துவம் போற்றும் சமூகமா? கையாலாகாத பெற்றோரா? 🤔

காதல் பூங்கொத்தைக் கையில் கொடுத்து, அவசரகதியில் மணமாலை மாற்றி, ஓராண்டு புரிதலின்றி வாழ்க்கையை ஓட்டி, பிறகு வக்கீலை நாடி, வாய்தாக்கள் வாங்கி, பிறகு பரஸ்பர விவாகரத்தை ஏற்பதுதான் டிரென்ட்.💐 Miss ஆக இருந்து Mrs ஆகி மீண்டும் Miss ஆவது ஓர் அரிய கலை! 

சாஸ்திரப்படி அக்னி சாட்சியாக மணம் முடித்தபின், சட்டப்படி விவாகரத்தான கணவன் இறந்தால் அவள் கைம்பெண்ணாகக் கருதப்படுவாளா? சாஸ்திரப்படி ஆவாள் ஆனால் சட்டப்படி அவள் நித்திய செல்வியாகவோ மறு சுமங்'கிலி'யாகவோ விருப்பத்தகுதியுடன் வாழலாம்! 😂

-எஸ்.சந்திரசேகர்



புதன், 8 பிப்ரவரி, 2023

இது கண்டனத்திற்குரியது!

அர்ச்சகரின் தட்டில் இனி தட்சணை காசு போடக்கூடாதாம். கோயில் உண்டியலில் மட்டும் போடவேண்டும் என்று இந்து அறநிலையத்துறை வலியுறுத்துகிறதாம்.  கோயில் ஆபீசில் கட்டணம் செலுத்தி அங்கு பக்தர் யாருக்கேனும் கட்டளை சேவையோ, ஹோமமோ, பரிகாரப் பூஜையோ, திருமணமோ நடத்தி வைத்தால் அதை நடத்தி வைப்பவர்க்கு இனி சம்பாவனை கொடுப்பது எப்படி? நான் அறிந்தவரை அர்ச்சகர்களின் மாத வருமானமே ₹750 முதல் ₹3000 வரை தான்‌. இதை வைத்து இக்காலத்தில் என்ன ஜீவனம் செய்ய முடியும்? 

சோறுடைத்த சோழ தேசத்தில் மாதம் மும்மாரி பொழிந்ததற்கு அந்தணர்கள் பெரும்பங்கு வகித்தனர். 

"வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!"

பெண்கள் தம் கற்பில் தவறலாம், மன்னன் சரியாக ஆட்சி செய்யத் தவறலாம். ஆனால் மறையோதும் வேதியர் கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறிடக்கூடாது என்ற பொது நோக்கத்தில் அவர்களை ஆதரித்து வறுமை வராமல் காத்திடவே சதுர்வேதிமங்கலம் கிராமங்களை இராஜராஜ சோழன் நிறுவினான். தான் கட்டுவித்த கோயில்களில் எல்லாமே கிரமமாக நடக்க ஏற்பாடுகள் செய்தான். ஆனால் இக்கால முற்போக்கு வரலாற்று ஆசிரியர்கள் சோழனின் இச்செயலை சமூக அநீதி என விமர்சித்து உமிழ்ந்தனர்.

இன்றைக்கு நடப்பது எதுவும் நல்லதல்ல. மாதம் மும்மாரி என்ற நிலை மாறி வடகிழக்கு/ தென்மேற்கு என்ற அளவில் உள்ளது. சமயத்தில் அதுவும் பொய்த்துப் போகும். கடும் புயல் வீசி உள்ள பயிர்கள் அழிந்து நாசமாகும். அப்படியே அறுவடை ஆனாலும் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பயிா் முளைத்து வீணாகும்.

ஆக அரசு உத்தரவு என்ற பெயரில் இனி சம்பிரதாய நெறிமுறைகளை மாற்றி விடுவார்கள். பெரிய கோயில்களில் அபிஷேகம் அலங்காரம் ஒருமுறை போதும், சஷ்டி/ பிரதோஷ கால அபிஷேகத்திற்கு தேன் பால் பன்னீர் யாவும் அரை லிட்டர் மட்டும் உபயோகிக்க வேண்டும், வேதகோஷ மந்திரங்கள் கருவறைக்கு வெளியே கேட்கக்கூடாது, மடப்பள்ளியில் திருவமுது சமைப்பது கூடாது போன்ற புதிய விதிகள் அமலுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை! 😀

"சுழலும் பூமி உயிர்களை வளர்க்கும்

  நடுங்கும் பூமி அதர்மத்தைக் காட்டும்

  உழலும் ஆன்மா வினைப்பயன் ஏற்கும்

  கழலும் ஊன்றக் காலச்சுவடு வலிக்கும்"


-எஸ்.சந்திரசேகர்



வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

உடல்நலம் பேணல் எட்டாக்கனியா?

"நோய் தொற்று வராமல் காத்துக்கொள்ள சிவப்பு கவுனி, மூங்கில் அரிசி மற்றும் கருங்குறுவை அரிசியை மட்டுமே சமைத்துச் சாப்பிடுங்கள்" என்று ஒரு பதிவில் சொல்லியிருந்ததைப் பார்த்தேன்.

இன்றைய சந்தை நிலவரப்படி, உத்தேச விலையாக இந்த ரகங்கள் ₹100 முதல் ₹200 வரை விற்கப்படுகிறது. பொன்னி பச்சரிசி கிலோ ₹53 முதல் ₹56 வரை விற்கிறது. இதில் மேற்படி பாரம்பரிய அரிசி ரகங்களை நடுத்தர குடும்பத்தால் ஒரு மூட்டை வாங்கிட முடியுமா? அரை கிலோ மட்டும் வாங்கி என்ன செய்ய? முழு அரிசி மணிகளை எண்ணி எண்ணித்தான் உலையில் போட வேண்டும். வழித்தால் சட்டியிலிருந்து அகப்பைக்காவது வருமா? 😀

அப்படியே சாப்பிட்டாலும் உடல் உடனே வலுப்பெற்று எதிர்ப்பு சக்தியைக் காட்டுமா? சித்த /ஆயுர்வேத மருந்துகளே நாள்பட்ட பிரச்சனைக்குக் குறுகிய காலத்தில் தீர்வு தருவதில்லை. அது ஒரு மண்டலம் தாண்டி மெள்ள வீரியத்தைக் காட்டும்வரை நோயாளிக்குப் பொறுமையும் நம்பிக்கையும் இருப்பதில்லை. ஏன்?

சிகிச்சை முறை பற்றி வைத்திய குண சிந்தாமணி சொல்வதென்ன? மருத்துவ பிரயோகத்தை உடல் ஏற்றுக்கொண்டு உடனே செயல்படும் அளவில் அந்த மருத்துவ முறையில் உடலைப் பழக்கி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நோயாளியைப் பரீட்சித்துப் பார்த்தபின் உடலில் தங்கிய கசடுகளை வெளியேற்ற ஒவ்வொரு முறையும் உள்ளுக்கு பேதி மருந்து தந்து சுத்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சித்த குருமருந்து கிரகிக்கப்பட காலப்பிரமாணம் அந்தி/ சந்தியோ, வாரமோ, பட்சமோ,  குணமாகப் போதுமானது. பாதிப்பின் தீவிரம் பொறுத்து மண்டலம்/ அயனம் வரை கால அளவு நீடிக்கும். வைத்திய குண சிந்தாமணி அளவுகோல் கிரமப்படி பார்த்தால் நம் இன்றைய வாழ்க்கை முறைக்குச் சித்த வைத்தியம் எடுபடாது. சித்த நூல் எழுத்தாளரே இப்படிச் சொல்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.

திடீரென சித்தாவுக்கு மாறுங்கள் என்றால் நம் வாழ்க்கை முறைகளை நம் பூட்டன் காலத்துப் பழைய நிலைக்குக் கொண்டுபோக முடியுமா? முடியாது! 🤔 மலைவாழ் மக்கள் போல் இயற்கையுடன் ஒன்றி பூரண நலத்துடன் வாழ்ந்தால் அவர்களைப் பின்தங்கிய மக்கள் என்கிறோம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை! ஆழமாகப் பார்த்தால், உணவும் ஆங்கில மருந்து மட்டும் எதிரி அல்ல, நம்மைச் சுற்றியுள்ள பல நாகரிக அம்சங்களும் வாழ்க்கை முறையும் சித்த மருத்துவ செயல்பாட்டுக்கு எதிரிதான்! பத்தியம் என்பது உணவுக்கு மட்டுமல்ல வாழ்வியல் முறைக்கும்தான். நாம் ஒரு நூற்றாண்டுக்கு முந்தி இருந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றவேண்டும். இதை எந்த சித்த வைத்தியராவது அடித்துச் சொல்லியுள்ளாரா? மீண்டும் மீண்டும் அவரிடம் கப்பம் கட்டும்படி ஆகிறதே!

உணவே மருந்து என்ற அளவில் அன்றாட சமையலைச் செய்து உண்டு ஓரளவுக்குக் காத்துக்கொள்கிறோம். இதில் கற்பங்கள் செய்து உண்டால் என்ன தவறு என்று நினைப்போர் உண்டு. காய்கனி தானியம் எல்லாமே மருந்தடித்து விளைவித்து எங்கெங்கிருந்தோ சந்தைக்கு வருகிறது. இதுவே உடலுக்குப் பழகிவிடுவதால் சித்த மருந்துகள் அவசரத்திற்கு எடுபடாமல் போகும். ஆர்கானிக் பண்ணைக் காய்கறிகள் என்று விற்றாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராய முடியாது.

நியாயமாகப் பார்த்தால் பாரம்பரிய அரிசி ரகங்களை அரசு ஊக்குவித்து அதை ரேஷன் கடையில் கிடைக்கச் செய்ய வேண்டும். கலப்படமற்ற பால் தேன் பனைவெல்லம் பதநீருக்கே வழியைக் காணோம்! இதில் அரிசியா? சித்த மருந்தோடு நாம் குடிக்கும் அநுபானம் சுத்தமாகக் கிடைக்க வேண்டாமா? 

மக்களே, அதை வாங்காதீர்கள் இதை உண்ணாதீர்கள் என்று சமூக வலையில் உசுப்பேற்றி அதற்குத் தாளம் போடும் கூட்டம் ஒரு பக்கம். தனிமனித மாற்றம் வேண்டும் என்பார்கள். ஆனால் சராசரி மக்களின் பொருளாதாரத்தை நினைத்து எந்தப் பதிவும் வருவதில்லை. வசதி படைத்தவன்தான் தனி மனித மாற்றம் கொண்டு வர வேண்டும். இல்லாதவன் வெறும் கோஷம் போட்டுவிட்டு ஒதுங்க வேண்டும். ஏன்? அதை ஆதரித்து வாங்கி ஊக்கப்படுத்தும் நிலையில் அவனுக்கு வசதி இல்லையே! உற்பத்தி அதிகமானால் விலை குறையும். வாங்கும் திறன் கூடும். இதுவே யதார்த்தம்.

தன் நிலத்தில் விளைந்த அரிசியை விவசாயி உண்டாலும் இதர உணவுப் பொருளைச் சந்தையில் வாங்கத்தானே வேண்டும்? உடல் நலம் கெட்டுப்போக வேறு வழிகளா இல்லை? பொது சந்தையைச் சாராமல் ஒவ்வொருவரும் தன் குடும்பத்திற்கான தனிமனித சுயசார்பை அடைய முடியுமா? ஏற்றம் பற்றி வலைத்தள கட்டுரைப் பதிவில் வக்கணையாக எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்கும். ஆனால் நிஜத்தில் ...?

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 20 ஜனவரி, 2023

எப்படி நம்புவது?

நேற்றைய பதிவைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். “செவ்வாய் கிரகத்துல காந்த சக்தி மூன்று வேளையும் வருவதற்கு பழனிதான் காரணம்னு எப்படி சொல்றீங்க? நவபாஷாண சிலை பற்றி தெரிஞ்ச நாம் வேணும்னா இதை நம்பலாம் ஆனால் வெளிநாட்டுக்காரங்க ஒத்துப்பாங்களா?”

அவர் கேட்டது சரியே. 👍 ஆன்மிகத்தை வைத்துத்தான் அறிவியல் நிகழ்வு ஒன்று நிரூபிக்கப்படவேண்டும் என்று இருந்தால் அதை உலக விஞ்ஞானிகள் நிராகரிப்பார்கள். தென்னிந்தியாவில் எங்கோ பழனியில் உள்ள மூன்றடி உயர ஒரு சிலை எப்படி 250 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்? நான் சொன்ன கருத்தை ஏற்பதா வேண்டாமா என்று இந்த முகநூல் குழுவில் உள்ளவர்களே நினைக்கலாம்.

செவ்வாய் கிரகம் பூமியின் கர்ப்பத்திலிருந்து விடுபட்டுப்போன ஒரு செந்நிறமான கோள். அதில் உயிர்கள் வாழாது ஏனென்றால் -80°C குளிர், நீர் இல்லை, உப்பும் ரசாயனங்களும் பாறைகளும் நிறைந்த நிலப்பரப்பு, ஏறக்குறைய காற்று இல்லாத வெற்றிடம், அங்கே புவியீர்ப்பு விசை என்பது நாற்பது விழுக்காடுகூட இல்லை.

நம் பூமியிலிருந்து ரேடியோ சிக்னல் சமிக்ஞை அனுப்பினால் அது அங்கே சென்று சேர குறைந்தது 3 நிமிடம் முதல் 22 நிமிடம் வரை ஆகும். பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரத்தைப் பொறுத்தே நேரம் அமையும். ஆக சிக்னல் இங்கிருந்து போய் அங்கே அடைந்தபின் மீண்டும் பூமிக்குத் திரும்ப எப்படியும் சராசரியாக 12 நிமிடங்கள் ஆகும். 

முன்னொரு சமயம் பழனி விக்ரகத்தில் சாற்றிய ராக்கால சந்தனத்தை எடுத்துக் கரைசலாக்கி அதில் என்னென்ன உலோக பாஷாணங்கள் கரைந்துள்ளது என்பதை அடாமிக் ஸ்பெக்ட்ரோமீட்டார் மூலம் கண்டறிய முயன்று, அதில் எந்தவொரு உலோக அணுக்களும் வெளிப்படாது போனதே நவீன தொழிநுட்பதிற்குக் கிடைத்த பெருந்தோல்வி.

விளாபூஜை, உச்சிகாலம், சாயரட்சை காலங்களில் பழனி முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் ஆராதனையின்போது அங்கே செவ்வாயில் நாஸா செயற்கைக்கோள் இறக்கிவிட்ட யந்திரம் காந்தப்புல வீரியத்தை அளவீடு செய்து பார்த்தால் முடிவு தெரிந்துவிடும். சந்தன கரைசல் போலவே காந்தப்புல சோதனையில் தெய்வசக்திபற்றி எதுவும் தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை.     

ஆன்மிகத்தைக் கொண்டு அறிவியலை நிரூபிக்க இருப்பின் அதை இவ்வுலகம் ஏற்காது. Theory of doubt, அடிப்படையில் பழனி அத்தியாயத்தை ஓரமாய் வைப்பார்கள். வெகுகாலமாய்த் துப்புத் துலங்காத ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட காவலர், கடைசியாய் அஷ்டகர்ம மாந்திரீகரிடம் சென்று அந்தக் கொலையை யார் செய்தது, அதற்கான தடயங்கள் எங்கேனும் உள்ளதா என்பதை ரகசியமாய்க் கேட்டறிந்து, மேய்ந்து, இழுபறியான வழக்கை விரைந்து சரியாக முடித்துவிடுகிறார். அஷ்டகர்ம பிரயோகத்தில் வெளிப்பட்ட விஷயங்களை நம் சட்டம்/நீதி ஏற்காது என்பதால் தனிப்பட்ட காவலர் புரிதலில் ஏற்றுக்கொள்ளலாமே தவிர அதை ஒரு வாக்குமூல சாட்சியாய் ஏற்கமுடியாது. 

கிரகண காலத்தில் உணவுப் பண்டங்களின் மீது தர்ப்பைப்புல் போட்டால் அது கதிர்வீச்சைத் தடுக்கும் என்பதை மேலையில் ஏற்கவில்லை. ஆனால் அதை நெடுங்காலமாய் வீடுகள்தோறும் சாஸ்திரமாக நாம் கடைப்பிடித்தோம். பல நூற்றாண்டுகளுக்கு முன் போகர் நிறுவிய நவபாஷாண சிலையானது காலத்தால் தேய்மானமாகி வலுவிழந்தது என்றாலும், இன்னும் சக்தியை இழக்கவில்லை. அதை அவ்வப்போது போகர் தன் நிலவறையிலிருந்தே செப்பனிடுகிறார் என்று நான் சொன்னாலும் அதற்கு ஏது சாட்சி? 

அதுபோல்தான் செவ்வாயின் காந்தப்புலமும் பழனி முருகனின் அபிஷேகங்களும். காந்தப்புல சோதனையில் இந்து சமய நம்பிக்கை வெற்றிபெற்றால் வல்லரசு நாடுகள் இதை விரும்பாது. அதையும் தாண்டி இச்சோதனையில் தன்னுடைய சக்தியை உலகறிய வெளிப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியது தண்டபாணித் தெய்வமே தவிர நாம் அல்ல! நான் சொன்னது ஒரு தகவலாக இருக்கட்டும். 🙏

-எஸ்.சந்திரசேகர்





வியாழன், 19 ஜனவரி, 2023

பழனியும் செவ்வாயின் காந்தப்புலமும்!

காந்தப்புலம் என்பது செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் சம்பந்தமே இல்லை. ஏனென்றால், பூமியைச் சுற்றி காந்த மண்டலம் கவசமாக இருப்பதுபோல் செவ்வாய் கிரகத்தில் இல்லை. ஏன்?

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் இருந்த காந்த மண்டலம் மறைந்து போனதாம். அதன் விளைவாக காஸ்மிக் கதிர்வீச்சுகள் நேரடியாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் (Martian atmosphere) புகுந்து செவ்வாய் கிரகத்தை உயிர்கள் வாழ முடியாத இடமாக மாற்றியது.

நாஸா ஆர்பிட்டர் மூலம் சேகரிக்க்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்த இந்திய விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் காந்தப்புல சாலிட்டரி வேவ்ஸ் (Solitary waves) உள்ளதென கண்டறிந்தனர்.

இது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் (Mars Surface) இருந்து சுமார் 1,000 முதல் 3,500 கிமீ உயரத்தில், விடியற்காலை, பிற்பகல் மற்றும் அந்தி சாயும் பொழுதில் பெரும்பாலும் அடர்த்தியாய் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பின் மூலம் செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலம் தொடர்பான பல புதிர்களுக்கு விடைகள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். முருகன்- பழனி- செவ்வாய் தொடர்பைப் பற்றி நம் மிகப்பழைய பதிவில் சொல்லியிருந்த விஷயத்தை நினைவூட்டிப் பாருங்கள். செவ்வாய் கிரகத்தில் எப்போது சாலிட்டரி வேவ்ஸ் அதிகமாகிறது?

இங்கே பழனியில் நவபாஷாண முருகனுக்கு விளாபூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை நேரத்தில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கும் சமயம் அங்கே செவ்வாய் கிரகத்தில் காந்தபுல அலைகள் அடர்த்தியாய் எழுப்பப்படுகின்றன. இங்கே இராக்கால பூஜையில் சந்தனம் சாற்றிக் குளிரூட்டிய பிறகு செவ்வாயில் காந்தப்புல அலைகள் எழுவதில்லை. ஆக செவ்வாயில் உயிர்கள் வாழவேண்டும் என்ற நோக்கில் போகர் பிரயத்தனப்பட்டது தெரிகிறது!

"தரணீ கர்ப்ப ஸம்பூதம், வித்யுத்காந்தி ஸமப்ரபம், குமாரம் சக்திஹஸ்தம் ச, மங்களம் ப்ரணமாம்யஹம்" 

என்பது செவ்வாய் கிரகத்திற்கான ஸ்லோகம். அதாவது பூமித்தாயின் கர்ப்பத்திலிருந்து உதித்த செவ்வாய் கிரகமே, செவ்வேளின் அறிவொளி காந்தம் சக்தியூட்டப் பிரகாசிக்கும் உன்னை வணங்குகிறேன் என்பதே பொருள். 

ஆக இங்கே பூமியில் செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலைக்கு அபிஷேகம் பூஜை நடக்கும்போது அங்கே செவ்வாயில் அதிர்வலைகள் திடீரென தன்னிச்சையாக எழுகிறது. இதற்கான காரணத்தை நாம் அறிவோம் ஆனால் வடஇந்திய / நாஸா விஞ்ஞானிகளால் புரிந்துகொள்வது கடினம். என் முதுகலை இயற்பியல் பாடத்தில் இதுபோன்று நடக்கும் கோட்பாட்டை  A disturbance of a self-reinforcing wave packet (soliton) with nonlinear dispersive effect என்று படித்த நினைவு உள்ளது.

அதாவது செவ்வாயில் ஒரு காந்தப்புலம் நிரந்தரமாக இருந்து அது உண்டாக்கும் காந்தவிசை அதிர்வலைகளின் விளைவு எப்படி இருக்குமோ அப்படித்தான் திடீரென மூன்று வேளையும் சாலிட்டரி வேவ்ஸ் அந்நேரம் மட்டும் விநோதமாய் எழும்பி மறைகிறது.

இங்கே விக்ரஹத்திற்கு மந்திர கோஷம் முழங்க அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்போது அங்கே இதன் தாக்கம் தெரிகிறது என்பதே நிஜம். சுருக்கமாய்ச் சொன்னால் இங்கே பூமியில் த்ரிகாலமும் மந்திரங்கள் நவபாஷாண சிலை முன் ஒலிக்கும்போது அங்கே மாற்றங்கள் பதிவாகிறது. ஓம் சரவணபவ 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்


ஞாயிறு, 15 ஜனவரி, 2023

சமையல் மகத்துவம்!

பொங்கும் அரிசியிலேயே சமத்துவம் இல்லை. ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு பக்குவத்தில் சமைக்க வேண்டும். எல்லா ரகங்களையும் உலையில் சேர்த்துப் போட்டால் அதில் பாதி குழைந்தும், சமைந்தும், அடிபிடித்தும், நறுக்கரிசியாய் தங்குவதே இயல்பு. வெந்த அரிசியில் குற்றமில்லை, சமைக்கும் பாங்கு அறியாமல் ஒன்றாய்க் கலந்து சோறு சமைத்தவன் செயலில்தான் குற்றம்!

சமுதாயத்தில் வேற்று மதத்தாருடன் தோழமையுடன் பழகுவது தவறல்ல. அவர்களுடைய பழக்கவழக்கங்கள் நம் நெறிக்கு ஏற்புடையதன்று என்பதைச் சிந்தியாமல் அச்சமூகத்தில் கலந்து உறவாடி ஒட்ட முடியாமல் தவித்து இணக்கமாய் இருப்பதுபோல் நடிப்பது என்பதா சமத்துவம்? 🤔

சமையல்/ சமயம், இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. ஒரே நெறியில் ஒரே பக்குவத்தில் பிசகில்லாமல் கலந்து ஒரே குறிக்கோளைப் பிழையின்றி அடைவதே இதன் சிறப்பு.

அரிசியின் பரிணாம நிலைகளான நெற்பொரி, அவல், புழுக்கல், களி, அடிசில், கஞ்சி, இட்லி என நாம் உண்ணும் சோறுக்கே வெவ்வேறு நிலைக்கேற்ப சமைக்கும் பக்குவம் மாறுபடுகிறது. நம் சமயங்களும் அப்படித்தான்! உணவில் அறுசுவை இருக்கலாம் ஆனால் பஞ்சபக்ஷ பரிமான்னம் என்னும்போது சமைத்து இலையில் பரிமாறிய உணவின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கிறது. 👍

-எஸ்.சந்திரசேகர்



சனி, 14 ஜனவரி, 2023

சிவகதிக்கு உழைப்போம்!

சடை விரித்தாடும் அம்பலவாணன்

   சிருஷ்டியில் விடுத்த ஆன்மாவை

அடை காத்துப் பத்திரமாய்ப்பேண

   அழகுற அளித்த பெருங்காயத்தை      

இடை வழியிலேயே களங்கப்படுத்தி

   இச்சைகள் துர்குணங்கள் ஊட்டி

விடை காணாமலே பிறந்திறந்தோடி

   வீணாய்ப் போனோம் நமச்சிவாய  

   

ஆசை அதிகரித்து அகத்தை மாசாக்கி 

   ஆணவம் ஆத்திகம் கோலோச்சியாட  

மீசை முறுக்கியே மும்மலமும் சேர்த்திட

   மீண்டும் யமனின் தண்டனையேற்று

பூசை செய்யாமல் புண்ணியம் தேடாமல் 

   பாவியாய்ச் சிவநிந்தனைகள் புரிந்து

ஓசை கொடுத்த நாயகியை மதிக்காமல்  

   ஓதுவதைத் துறந்தோம் நமச்சிவாய


தடமிடும் ஆன்மா வினையறுக்கவே 

   தருமநெறி காக்கப் பிறவியெடுத்துப்

புடமிடும் குணங்கள் பெருங்கடல்தாவிப்

   பாவம் ஈட்டாமல் நற்பேறடைய 

நடமிடும் பொற்பதம் அசையவொரு

   நளினமிகு குஞ்சித பாதந்தொட்டு

வடமிடும் காலன் மிரட்டும்போது

   வாயாரச் சொல்வோம் நமச்சிவாய 


மறை நான்கும் கைதொழும் கூத்தனை 

   மாசற்ற தேவாரத்தால் பாடித்தொழ

பறை அளக்கும் பரமன் பெம்மானைப் 

   பண்ணிசை சாமத்தால் நனைத்துக்

கறை படிந்த ஆன்மாவை வெளுக்கக்

   கரங்குவிய வண்ணானைப் பணிந்து 

முறை தோறும் பிணியில் சிக்காதோட

   மந்திரம் சொல்வோம் நமச்சிவாய


புக்தி தசைகள் கிரகங்கள் பீடித்தாலும் 

   பண்புடனே கோளறு பதிகம் பாடியே 

பக்தி நெறியில் பஞ்சாட்சரம் ஜெபித்து    

   பிரதோஷ காலம் சிவதலம் தொழுது 

சக்தி பெற்றுச் சிவயோகமும் கைக்கூட

   சித்தம் முழுக்க தசநாதங்கள் ஒலித்து 

முக்தி சாலோக சாயுச்சியமும் அடைய 

   மறவாமல் சொல்வோம் நமச்சிவாய     


-எஸ்.சந்திரசேகர்