அருள் அள்ளித்தரும் குலதெய்வ மகாமாரி!

This blog carries interesting articles on travel, spiritual, personal, poetical, social experience of the author.
அருள் அள்ளித்தரும் குலதெய்வ மகாமாரி!

ஒரு முகநூல் பக்கத்தில் இருந்த மீம் பதிவு எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. ‘கறுப்பர் கூட்டத்தை எதிர்க்கும் இந்துக்களே! முருகன் என்ற தமிழ்ப் பெயரை எந்த பார்ப்பனராவது வைத்துக் கொண்டதுண்டா?’ என்று அதில் இருந்தது. சஷ்டி கவசத்தைத் தரக்குறைவாக விமர்சித்த காரணத்திற்காக அவர்களைக் கண்டித்த முருக பத்தர்களிடம் தங்கள் கோபத்தை இவ்விதம் காட்டியுள்ளனர்.

கவசம், காப்பு, ரட்சை என்றால் என்னவென்றே அடிப்படையில் அறியாத ஒரு கூட்டம் தமிழில் கொச்சையாய் கலாய்க்கிறது. பக்தன் தன் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் குறிப்பிட்டு அந்த ஒவ்வொன்றையும் நோயணுகாமல் காக்கக் கோருகிறான். எந்த ஒரு பூசை செய்யும் முன் தன் தேகத்தின் ஆறாதார சக்கர உறுப்புகளை விரலால் தொட்டு மந்திரம் சொல்லி அங்க வந்தனம் செய்து கொள்கிறான்.

மஹாகவி என்றாலே நம் நினைவுக்கு வருவது காளிதாசன். காஷ்மீரத்தில் பிறந்து வளர்ந்து பிற்பாடு விதியின் போக்கில் கலிங்கம் வந்து சேர்ந்தான். உஜ்ஜைன் நகரத்தில் காளிதேவி பிரத்தியட்சமாகி களிதாசனுக்குப் புலமையை பூரணமாக அருளினாள். கிமு.3 காலகட்டத்தில் சந்திரகுப்த விக்ரமாதித்யன் அவையில் மஹாகவியாக உலா வந்து ரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம், அபிக்ஞானசகுந்தலம் போன்ற தலைச்சிறந்த சம்ஸ்கிருத இலக்கியங்களைப் படைத்தான்.

எல்லாவற்றையும் கொரோனா அடியோடு புரட்டிப்போட்டு விட்டது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும்போது சோதனைகளே அதிகம் தாக்கும்.

தடிபள்ளி ஶ்ரீ ராகவநாராயண சாஸ்திரி (1896-1990) போன நூற்றாண்டில் வாழ்ந்த வேத விற்பன்னர். இவர் பாலாதிரிபுர சுந்தரியின் உபாசகர். சிறுவயது முதலே வாலைத் தெய்வ வழிபாட்டில் ஈர்க்கப்பட்டு, அதன்பின் அவள் அருளால் எல்லா ஞானத்தையும் பெற்றார். காஞ்சி மஹாபெரியவர் இவரை ஓதாமல் உணர்ந்த ஞானி என்று சொல்வாராம்.


வாசக நண்பர் ஒருவர் நீண்டநாள் விருப்பமாக என்னுடைய புத்தகத்தை முதல்முறை வாங்கினார். ஜூன் தொடக்கத்தில் புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்தபின் அது கூரியர் அலுவலகத்திலேயே பட்டுவாடா ஆகாமல் பதினெட்டு நாள்கள் இருந்துள்ளது. கடந்த வாரம் இவரே நேரில் போய் வாங்கி வந்துள்ளார். மாலையில் சித்தர் நூலை வாங்கி வந்து பயபக்தியுடன் அதைப் பூஜை அடுக்கில் வைத்தபின் எடுத்துப் படித்தார். அன்று முன்னுரை மட்டுமே படிக்க முடிந்ததாம்.

தன் அண்டை நாடுகளின் எல்லைக்குள் அத்துமீறி நிலம் ஆக்கிரமிக்கும் சீனாவின் தாகம் தணிவதாகத் தெரியவில்லை. இந்தியா மங்கோலியா பூட்டான் என பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் நீண்டபடி போகிறது. கல்வெட்டு மற்றும் தொல்லியல் சரித்திர ஆய்வுகள்படி சீனாவின் கடலோர Fujian மாவட்டத்தின் Quanzhou பட்டணம் நமக்குத்தான் சொந்தம். எப்படி?

இலந்தை, கொடுக்காய்புளி, அரைநெல்லி, நாவல்பழம், களாக்காய், தேன் மிட்டாய், குச்சிக் கிழங்கு, மாங்காய் பத்தை, நுங்கு, கடலை உருண்டை, சேமியா பால் ஐஸ், கம்மர்கட், பிண்ணாக்கு பர்பி, வறுகடலை ...
இவை எல்லாம் என் பள்ளிக்கூட பிராயத்தை நினைவூட்டியது.
10 பைசா முதல் அதிகபட்சம் 50 பைசா வரை விற்றது.

எனக்குத் தெரிந்த ஒருவர் ரயில்வேயில் பரிசோதகராகப் பணி செய்கிறார் ஓய்வு பெறும் தருவாயில் இருக்கிறார். அவர் வெளியே நின்று மொபைலில் தன் சகா யாரிடமோ உரக்கப் பேசும்போது, 'நீ சேலத்துல அவன்கிட்டே வாங்கிக்க, உனக்கு மூணு எனக்கு ரெண்டு, வரும்போது கோயம்புத்தூர்ல நான் பாத்துகிறேன். எனக்கு ரெண்டு உனக்கு ரெண்டு' என்று பேசுவார். சரிதான்! வியாபாரிகள் கொண்டுவரும் சரக்கிற்கு எடை குறைத்துச் சலுகையில் கட்டணம் வாங்கும்போது அதற்குப் பிரதிபலனாக அந்த வியாபாரியே கடலை, துண்டு, வெண்ணெய், பருப்பு என்று சகலமும் தந்து கவனிக்க வேண்டும் என்பது புரிந்தது. இத்தனைக்கும் லகரத்திற்குக் கூடுதலாக மாத ஊதியம் பெறுகிறார். இருந்தாலும் வாங்கும் கை நீளம்!


கொரோனா தாக்கத்தால் இறக்குமதி வெகுவாகக் குறைந்ததால் வேறுபாட்டு மிகை பெரிதும் குறைந்துள்ளது. கடந்த மாதங்களில் தங்கம், கச்சா எண்ணெய், மின்னணுப் பொருட்கள், கனிமங்கள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி குறைந்ததால் இது சாத்தியமானது. இயல்பு நிலை திரும்பிய பின்பும் இந்த நிலை நீடித்தால் நம் நாடு ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முகநூலில் எதையோ அடித்துத் தேடும்போது என்னுடைய பழைய மற்றும் அண்மைப் பதிவுகள் ஏதேதோ குழுக்களில் பகிரப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அங்கே வெவ்வேறு பதிவுகளுக்கு அவ்வுறுப்பினர்கள் போட்டிருந்த கமெண்ட்ஸ் மிகுந்த சுவாரசியமாக, கிண்டலாக, நகைப்புமிக்கதாய் இருந்தன. இதோ சில சாம்பிள்கள்.

நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமி தன் அழிவாற்றலைக் கட்டவிழ்த்து விட்ட நிலையில், இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நான்கு மாதங்களுக்கு முன், இங்கொன்று அங்கொன்று என்று ஆரம்பித்தத் தொற்று, ஆனைக்கொண்டான் பாம்பைப்போல் மெள்ள இவ்வுலகையே தன்வசம் கொண்டது. இது செய்த கபளீகரத்தில், வல்லரசு முதல் சிற்றரசு வரை கதிகலங்கிப்போய் நிற்பது உண்மை.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியே நிலைகுலைந்து, பொருளாதாரம் வீழ்ந்து, தனிநபர் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. எல்லா துறைகளிலும் பாதிப்பின் எதிரொலி கேட்க, பட்ஜெட்டுக்கு இணையான புதிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் அதிரடியாக செயல்படுத்தப்பட்டன. பல துறைகளில் அவசரகால மாற்றங்கள் நடந்தன. முதல்முறை சுனாமி வந்தபோது எப்படி இருந்ததோ, அதுபோல் இது இல்லை என்பதை ஊரடங்குக் காலம் புகட்டிய வெறுமையில் புரிந்துகொண்டோம். நித்தமும் அச்சத்தின் பிடியில் மக்கள். எதிர்காலத்தப் பற்றிய கவலையில், திடமனம் கொண்டவர்களையும் அசைத்துப் பார்த்தது. பெரும்பாலானோருக்கு இச்சூழல் சோதனை மிகுந்த சாபக்கேடாகவும், இன்னும் பலருக்குப் புதிய அத்தியாயத்தைத் துவங்கும் தருணமாகவும் வாய்த்தது என்றால் மிகையில்லை.
நிரந்தரப் பணியும் ஊதியமும் பெறுவோருக்கு நெருக்கடி இல்லை. ஆனால், Safe zone எனப்படும் பாதுகாப்பான வட்டத்திலேயே இதுவரை பழகியவர்களுக்குப் பணி உத்தரவாதமில்லை என்றதும், செய்வதறியாது தடுமாறினார். நம் இளைஞர்களிடம் அளவிடமுடியாத மாபெரும் ஆற்றல் கொட்டிக்கிடக்கின்றது. சரியான வழியில் அதைப் பயன்படுத்தி முன்னேறும் உபாயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி கற்றபின் புதிதாக வேலை தேடுவோருக்கும், சொந்தமாகத் தொழில் தொடங்குவோருக்கும் இத்தருணம் வித்தியாசமாகத்தான் தெரியும். பட்டயப் படிப்பு முடித்த என் வாசகர், தன் நிலைமையை விளக்கிச்சொல்லி, தான் மேற்கொண்டு என்ன செய்வது என்று என்னைக் கேட்டார். கல்வி கற்ற/கற்காத, தொழில் அனுபவம் பெற்ற/பெறாத பலருமே, புதியதொரு சூழலில் தற்சமயம் இருக்கிறோம். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியைப் போன்றே இப்போதைய நிலை உள்ளது. அவருடன் உரையாடியதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
தனிமனித வாழ்க்கையில் எதிர்பார்ப்பு இருக்க வேண்டியதுதான் ஆனால், அது வரம்புக்குள் சாதிக்கக்கூடிய இயல்பான இலக்காக இருக்க வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் தான் இன்னவாக ஆக வேண்டும் என்று பள்ளிக்கூடப் பருவத்தில் நினைத்து வைத்திருந்த கனவு வசப்பட வேண்டும் என்றால், அதற்காக உழைக்க வேண்டும். மாறும் சமூகப் பொருளாதார வாழ்க்கைச் சூழலில் சிக்கியுள்ளோம்.
படிப்பினை
இருக்கும் நிலைக்கேற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டு முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நம்மைக் கடந்துபோகும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நமக்குப் பாடம்தான். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உத்திகள் உண்டு. அவர்கள் பட்ட இன்னல்கள், அவர்களுக்குக் கிட்டிய படிப்பினைகள் நமக்கும் பொருந்தும். இவனிடமிருந்து நாம் பெரிதாகக் கற்றுக்கொள்ள அப்படி என்ன இருக்கிறது? இவ்வாறு நீங்கள் கருதினால் வரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பதைக் காட்டும். ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், காக்கை, கழுகு, அணில், நாய் போன்ற ஜீவராசிகளும் எனக்கு ஆசான்களாக இருந்து போதித்துள்ளன.
கண்மூடித்தனமாக வளர்ச்சி வேகமாக நிகழ வேண்டும் என்ற பேராசையில், அவசரகதியில் முயன்று, கடைசியில் தோல்வியில் முடிந்து சூடுபோட்டுக் கொள்வதுண்டு. ஆகவே, வேகம் முக்கியமல்ல; விவேகம் வேண்டும். எப்போதும் வாழ்க்கையில் நிதானமன ஒரு போக்கைக் கடைப்பிடித்து, கவனத்துடன் முன்னேற வேண்டும். இந்த உரையாடல், உங்களில் பலருக்கும் ஒற்றையடிப் பாதையில் துணைவரும் கைவிளக்காக இருந்து பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை.
உங்களில் பலருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். தன்னம்பிக்கை பெற வேண்டும், சுயமாக முன்னேற வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டும், சமுதாயத்தில் முத்திரை பதிக்க வேண்டும், மனித உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், கவலைகள் இல்லாமல் வாழ வேண்டும், சூழ்நிலைகளைக் கையாளத் தெரிய வேண்டும், மன அழுத்தமின்றி வாழ வேண்டும், நேரத்தை அருமையாக நிர்வகிக்க வேண்டும், ஆக்கப்பூர்வமான எண்ணங்களைப் பெற வேண்டும் என்று பலவிதமான சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த கனவுகளுடன் இருப்பீர்கள்.
வாழ்க்கையைத் திட்டமிடுவதே, வெற்றிப்பாதையில் முதல் அடி வைப்பது போன்றதாகும். அவரவர் வாழ்க்கைப் பயணம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அலுங்காமல் குலுங்காமல், கசப்பான அனுபவம் பெறாமல், வெகு சிலருக்குத்தான் வாழ்க்கைப்படகு கச்சிதமாக அமைவதுண்டு. அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாகவோ, யாருடைய தயவிலோ எந்தவொரு பிரச்னையுமின்றி அமையும். ஆனால், அவர்களுக்கு வாழ்வில் நல்ல படிப்பினையோ அனுபவங்களோ ஒருபோதும் கிடைக்காது. ஏன்? முயன்று சிரமப்படாமல், யார் உழைப்பிலோ பயணித்தால், சுயமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. சிலருடைய வாழ்க்கையில், இலக்கின் மார்க்கம் தெரியும். ஆனால், செல்வதற்குப் பாதையின்றி கட்டாந்தரையாக இருக்கும். அந்நிலையில், உழைத்து மேலும் கீழும் விழுந்து எழுந்து, நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கும்போது, அங்கே அத்தடத்தில் நடந்துபோக, எதிர்காலத்தில் ஒற்றையடிப்பாதை பிறந்துவிடும். அந்தப் பாதை என்ன? யாருடைய உழைப்பின் கால்சுவடுகளிலோ பதிவான பாதை என்பதை மறக்கக் கூடாது. பாதை உள்ளது! அதில் நீங்கள்தான் சுயமாகப் பயணித்தாக வேண்டும்.
பாதையை உருவாக்க வேண்டும்
ஆகவே, நாம் செல்லும் ஊருக்குப் பயணிக்கவல்ல, பாதை இல்லாமல் போனாலும், அதை உருவாக்க வேண்டிய கட்டாயம் இன்றைய சூழலில் உள்ளது. உங்களுக்கேற்றதொரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நீர்நிலைகள் எங்குமே தென்படவில்லை என்னும் பட்சத்தில், நம் கால்களுக்குக் கீழே தோண்டினால் நீர் கிடைக்குமா என்று சிந்திக்க வேண்டும். கொஞ்சம் முயன்று உழைத்தால், பத்தடியில் நீர் கிடைக்கும் சாத்தியம் உண்டு. மேகம் திறந்துகொண்டு பெய்தாலும், அதைத் தேக்கிவைக்க குளத்தையாவது வெட்ட வேண்டும். ஆகவே, உழைக்க அஞ்சக் கூடாது!
முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், எப்போதுமே வாய்ப்புகள் கண்ணெதிரே இலாகவமாகக் கையில் வந்து மாட்டும் என்று சொல்லிட முடியாது. கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன் அடித்த பந்தைத் துரத்திப் பிடித்து, அதை பவுண்டரிகுள்ளே தாவிக் குதித்து எம்பிப் பிடிப்பதுபோல்தான் இதுவும். வாழ்க்கையே ஆடுகளம்தான்! உழைப்பின் சுகமும் மனநிறைவும், சொகுசான வாழ்க்கையில் கிடைக்காது. எல்லா வசதிகளும் இருக்கும்; ஆனால், நெஞ்சுறுதியும் அனுபவமும் கிட்டாது.
ஆகவே, உழைப்புக்கு அடித்தளமாக விளங்குவது தன்னம்பிக்கை, லட்சியம், விடாமுயற்சி. இவையெல்லாமே, உந்துசக்தியாக உள்ளிருந்து கட்டளையிட்டுச் செயல்படுத்துகின்றன. உள்மனம் உங்களுக்கு உணர்த்துவதை உன்னிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், சோம்பல் உங்கள் ஊக்கத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், உங்களுடைய ஆரோக்கியச் சிந்தனைக்கு மனம் அடிபணியும் என்றாலும், அதைவிட தாழ்நிலை எண்ணத்துக்கும், அதனால் உடல் பெறும் சுகத்துக்கும் அடிபணிந்தால், பின்னடைவுதான் ஏற்படும். ஆகவே, மனதும்-உடலும் ஒன்றையொன்று புரிந்துகொண்ட, பரஸ்பரம் உதவிக்கொள்வதை ஆக்கப்பூர்வ செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வழிகாட்டி அவசியம்
திட்டமிட்டபடி வாழ்க்கையைச் செவ்வனே வகுத்துக்கொள்ள, மூன்று அம்சங்கள் அத்தியாவசியமானது. அவை, பணம் – நேரம் – சக்தி. இவை சரியான விகிதத்தில் அமைந்துவிட்டால், அந்நபர் வெற்றியாளராவது உறுதி. கல்வி கற்கும் பருவத்தில் இருப்பவர்களுக்கும், வேலைதேடும் பிராயத்தில் உள்ளவர்களுக்கும், அதிகப்படியான நேரமும், உடலில் சக்தியும் இருக்கும். இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலேயே அதிகப்படியான நேரம் இருந்ததையும், என்ன செய்வதென்று தெரியாமல் வெட்டியாக உண்டு உறங்கிக் கழித்தவர்கள் ஏராளம். சிலருக்கு ஊதியமாவது வந்தது, பலருக்கு அதுவும் இல்லை. சிலருக்குச் சுயசம்பாதியம் இல்லாதபோதும், வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியும், சாதிக்க வேண்டும் என்ற கனலும் கண்ணில் தெரியும். இக்கூட்டத்தில், அப்போதும்போல் விதிவிலக்காக சோம்பேறிகளும் உண்டு. சுமார் முப்பது வயதுவரை இதுபோன்ற உத்வேகம் குறையாது. அந்தக் காலகட்டம்வரை, அவர்களைச் சரியாக வழிநடத்தவும், அவர்களது அபரிமிதமான நேரத்தையும் சக்தியையும் சரியாக நெறிபடுத்தத்தக்க வழிகாட்டி அவசியம்.
அதன்பிறகு அவ்வயதைக் கடந்தபின், நடுவயதுவரை உள்ளவர்கள் வெளியே ஓடியாடிப்போய் பணம் பொருள் சம்பாதித்துச் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். பகுதிநேர வேலைக்குப் போகலாமா, சொத்து சேர்க்கலாமா என்று எப்போதும் எண்ணம் இருக்கும். எத்தனை வயதுக்குள் என்ன வேண்டும் என்பதைச் சற்றும் பிராக்டிகலாக நினைத்துப் பார்க்காமல், கண்மூடித்தனமாக எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவோர் இச்சமுதாயத்தில் உண்டு. அது போன்றவர்களிடம் ஓரளவுக்குப் பணமும் சக்தியும் இருக்கும். ஆனால், 24 மணிநேரம் அதிகம் இருந்தால்கூட அவர்களுக்குப் போதாது. மன உளைச்சலால் அழுத்தம் எழ, அனைத்தையும் சாதிக்க வேண்டும் என பிரயாசைப்பட்டு, உடலைக் கெடுத்துக் கொள்வோர் உண்டு. என்னமோ நாளைக்கே பூகம்பமும் சுனாமியும் வந்து கொண்டுப்போய்விடும் என்பதுபோல், இவர்களுடைய அவசரமும் பதற்றமும் இருக்கும். இந்த வயதினர், அகலக்கால் வைத்து அதில் சறுக்கிடாமல் இருக்கவும், உடல்நலம் குன்றிடாமலும் இருக்க, சரியான திட்ட நிரலை வகுத்துக்கொண்டு, நிதானமாகச் சீராக முன்னேறினாலே போதுமானது.
முதுமையை நோக்கி அறுபதுகளைக் கடந்தபின், உடலும் மனமும் தளர்ந்துபோயிருக்கும் ஆனால், நேரமும் பணமும் ஓரளவுக்கு இருக்கும். ஓய்வுபெற்றும்கூட, பணிக்குச் செல்ல குடும்பச் சூழல் வற்புறுத்தினாலும், அதை எடுத்துச் செய்ய மனம் நினைத்தாலும், உடலில் சக்தி இருக்காது. இது வேடிக்கையாக இருக்கிறது, அல்லவா? ஒவ்வொரு வாழ்க்கைப் பருவத்திலும் மூன்று அம்சங்களில் ஏதோவொன்று இல்லாமல் போகும் நிலை இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மூன்றும் ஒருசேரக் கிடைக்கப்பெறுவது என்பது அபூர்வம். இந்த ரகசியத்தை இப்போது தெரிந்துகொண்டீர்களா? ஆகவே, இளைஞர்களே உங்கள் கையில் இருக்கும் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காமல், அதை வைத்துக்கொண்டு, அடுத்தகட்டத்தில் என்ன பெறலாம் என்பதை ஆக்கப்பூர்வமாக சிந்தித்துச் செயலாற்றுங்கள். நீங்கள் உழைத்த கொஞ்ச காலத்திலேயே, பயண மார்க்கத்தில், இப்போது ஒரு சன்னமான ஒற்றையடிப்பாதை உங்கள் கால்தடத்தால் உருவாகியிருப்பது கண்ணுக்குத் தெரியும். அதிலிருந்து கிளைப் பாதைகள் உங்களை வேறு இடங்களுக்கு இட்டுச் செல்லும்.
கொரோனா பிடியிலிருந்து மீண்டு எழும் இந்தியா மிகப்பெரிய வல்லரசாகத் திகழப்போவது உறுதி. ஒரு நாடோ/நபரோ புதிய பாதையை வகுத்துக்கொண்டு வளர்ச்சியடைய இயற்கையே கொடுத்த ஒரு தருணம்தான் இது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய அத்தியாயம் உதயமாகும். இந்தியப் பொருளாதாரம் அதிவிரைவாக முன்னேறி உலக அரங்கையே கலக்கப்போகிறது. நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு வகிக்கும் நீங்களும் சாதனையாளரே! தொடர்ந்து முன்னேறுங்கள்!

தியானத்திலிருந்த ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் கண் திறந்து, “விருபாக்ஷா! ஜெர்மானியர் ஒருவர் என்னை சந்திக்கக் காத்துக்கொண்டிருக்கிறார். தொலைவிலிருந்து இவ்விடத்திற்குப் பிரயாசைப்பட்டு அவர் வந்து சேர்ந்தது ஆச்சரியம்தான்! போய் அவரை அழைத்துவா” என்றார்.


கல்வி ஒருவருக்கு வாய்க்குமா? எந்த வயதில் எந்த நிலைவரை வாய்க்கும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. எல்லோரும் சர்வசாதாரணமாக 10/ +2/ பட்டயம்/ இளங்கலை/ முதுகலைப் பட்டம் வரை சிரமமின்றிப் படித்துத் தேர்ச்சியடைவது என்பது அவரவர்க்கு விதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு நிலைவரை கல்வி கற்றாலும் அது வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருமா? அல்லது கல்விக்குத் தொடர்பில்லாத தொழில் வாய்க்குமா என்பதும் மர்மமே!
பலர் ஏதோவொரு காரணத்தால் பள்ளி இறுதித் தேர்வைக்கூட முடிக்க முடியாமல் அப்படியே காலங்கள் ஓடிப்போனதைப் பார்க்கிறோம். காசு கொடுத்துக் கல்வியை வாங்கினாலும் அது பெயரளவில் பயன்படுமா பயன்படாதா என்பதும் கேள்விக்குறிதான். அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு என்று இருந்த காலம்போய் இன்று ஓரளவுக்குப் படித்து முன்னுக்கு வந்து தற்சார்பாக நிற்க முடிந்துள்ளது. கள்ளிப்பால் குடித்தும் நெல்லை விழுங்கியும் எப்படியோ தெய்வாதீனமாகப் பிழைத்துச் சாதனைப் படைப்போருமுண்டு.
சரியாக ஐந்து வருடங்களுக்குமுன் கர்நாடகாவிலுள்ள ஒரு ஆசிரியை தன்னுடைய முனைவர் ஆய்வுப் படிப்பு சம்பந்தமாக இணையத்தில் ஆதாரங்கள் கிடைக்குமா எனத் தேடியுள்ளார். ஒரு மாதமாகியும் இன்னும் ஆரம்பக்கட்ட செயலில்கூட இறங்காமல் இருக்கிறீர்களே என்று அவருடைய வழிகாட்டி Guide கேட்டுள்ளார். மன வேதனையுடன் அவர் அன்று ஒரு கோயிலுக்குச் சென்று தன் ஆய்வுக்கான ஆதாரக் களஞ்சியம் கிடைக்க வேண்டிக்கொண்டுள்ளார். அங்கு வயதான ஒரு பெரியவர் ‘இன்று போய் தேடிப்பார். உனக்குக் கண்ணில்படும்’ என்று கன்னடத்தில் சொல்லி ஆசிர்வதித்துள்ளார். அன்று அவர் தீவிரமாக இணையத்தில் எதையோ தேடப்போய் என்னுடைய ஆங்கிலக் கட்டுரைகள் மற்றும் வம்சாவெளியியல் பற்றிய தகவல்கள் முதல் தேடலிலேயே கிடைத்துள்ளது. அது தொடர்பாக என்னையும் இன்னும் சில மூத்தவர்களையும் பேட்டி எடுத்து ஆவணங்கள் திரட்டி Framework methodology உருவாக்கினார். நடுநடுவே ஆய்வு தொடர்பாக பல்வேறு மாடல்கள் அடிப்படையில் எங்களிடம் followup செய்து தகவல்களை பதிவுசெய்தார்.
இந்த ஐந்து ஆண்டுகளில் தனக்கு அளிக்கப்பட்ட guide மாறியாகிவிட்டது. அதன் பிற்பாடு வேறொருவரை நியமிக்க தன் ஆய்வு தொடர்ந்தது. தான் இதுவரை செய்ததை அப் புதியவர் படித்துப் பார்த்து அங்கீகரித்து மேற்கொண்டு வழிகாட்ட மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நேற்று முன்தினம் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு ‘ஜூலை 2, வியாழக் கிழமை காலை 11 மணிக்கு என் ஆய்வுத் தேர்வுக்கான இறுதி viva-voice நடக்கவுள்ளது. பல்கலைக்கழக External Examiner, Guide, SME, மற்றும் PhD துறையின் அங்கத்தினர்கள் முன்னிலையில் என்னுடைய Research work ஐ விளக்கி, அவர்களுடைய கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். அதனால் நீங்கள் என் Special Invitee யாக ஆன்லைனில் வந்திருந்து கலந்துகொள்ள வேண்டும் என்றார். என்னுடைய ஆய்வை உங்களுடைய கட்டுரைகளுடன் தொடங்கினேன். இறுதிச் சுற்றில் நீங்களும் இருக்க ஆசைப்படுகிறேன் என்றார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்!
குறித்த நேரத்திற்குப்
பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகவே ஆஜராகி விட்டேன். நான் அறிமுகம் செய்துவைக்கப் பட்டேன். வணக்கங்கள்
பரிமாறிக் கொண்டபின் மொழித்துறைத் தலைவர் ‘Now Ms.Srimathi, Ph.D. Scholar in
English will defend her Ph.D. thesis titled 'An enquiry into the language proficiency of the migrated community down the geneology' என்று அறிவிக்க, அவர் தன்னுடைய
presentation தந்தார். அது முடிந்ததும் ஒவ்வொருவரும் கேள்விகளையும் ஒப்பீடுகளையும்
கேட்டுக் குடைந்தனர். இறுதியாக என்னைப் பேசச்சொல்லி சில கருத்துகளைக்
கேட்டறிந்தனர். அத்தனை நேரம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தாவனகரே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும்
தன் மதிப்பீட்டைத் தேர்வுக்குழுத் தலைவருக்குத் தெரிவிக்க, ‘We hereby announce that the Ph.D.
Scholar has successfully defended her thesis work. The committee has approved to
confer the degree on her’ என்று அறிவித்தார். பிற்பாடு அவருக்கு
பாராட்டுகளைத் தெரிவித்தேன். சிவ சித்தம்!