About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 27 மே, 2018

சொப்பன தரிசனம்

இன்று அதிகாலையில் ஒரு கனவு. கண் எதிரே நீண்ட தோகையுடன் மயில் ஒன்று நடந்துவிட்டு சிறகடித்துப் பறந்தது. அதன் பின்னே ஒரு துறவி வந்து நின்று பேசாமல் என்னை உற்றுப் பார்த்தார். அவர் திருப்புகழ் அருணகிரிநாதர் என்று உணர்ந்து கொண்டேன். அப்போது ஒரு குரல் கேட்டது, "கூவும் ஞவ்வும் கோவும் குமரனே". அதையே நானும் திரும்பச் சொல்கிறேன். கனவு முடிந்தது.
உடனே 'முருகா முருகா' என்று சொல்லிக்கொண்டு எழுந்துவிட்டேன். பிறகு இது என்ன பொருள் என்று யோசித்தேன், 'குமரனே நம் தலைவன் என்று சேவலும் மயிலும் சொல்கிறது. அதாவது கொகொ என்று கூவும் சேவலும், ஞவ் என்று அகவும் மயிலும் அவனே என்பதை அவனுடைய அனுபூதிகளே சொல்வதாக பொருள் விளங்கியது. இன்று அருணகிரியார் போதித்து அருளியது இதுவே. ஓம் சரவணபவ!
Image may contain: 1 person, smiling, bird

வியாழன், 24 மே, 2018

செப்பும் வேண்டாம், சீப்பும் வேண்டாம்

"மன்னனே தன் தேச வளத்தை அழித்து காற்றையும் மண்ணையும் நீரையும் நஞ்சாக்குவான், மக்களைக் கொன்று குவிப்பான்." இது கலியுக லட்சணங்கள்.
இதை இன்று கண்கூடாக தூத்துக்குடியில் காண்கிறோம். எலியின் வாலை பெருச்சாளி பிடித்திருக்க, பெருச்சாளியின் வாலை முதலை பிடித்திருக்க, முதலையின் வாலை முதலாளி பிடித்திருந்ததானாம். அப்படி ஆகிவிட்டது இன்றைய ஸ்டெர்லைட் பிரச்சனை. அந்நிய முதலீடு, வேலை வாய்ப்பு, பொருளாதார அபிவிருத்தி என்று சொல்லியே நம் மாநிலத்தில் எல்லா பாதகங்களும் நடந்துவிட்டது.
"பேச்சுவார்த்தை நடத்தியது எங்க ஆட்சிதான் ஆனால் ஆலையைக் கட்ட NOC கொடுத்து கையொப்பமிட்டது பின்னாடி வந்த ஆட்சி. அனுமதி தந்தது நாங்கதான் ஆனால் விஷவாயு கசிந்தும் ஆலையை மூடாம இயங்க விட்டது எங்களுக்கு பின்னாடி வந்த முன்னாடி இருந்த ஆட்சி" என்று ஆளாளுக்கு விரல் சுட்டிப்பேசி சண்டையிடுவது தீர்வாகுமா? பாவம் தூத்துக்குடி மக்கள்.
Image may contain: outdoor and text

மோட்சம் தரும் மந்திரம்

இன்று ஆட்டோவில் பயணித்த ஒரு வடநாட்டுக்காரர் தன்னுடைய கையில் நீளமாக எதையோ பச்சை குத்தியிருந்தார். என்னவென்று முன்னே உற்றுப்பார்த்துப் படிக்க, அது மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் என்று தெரிந்தது. உடனே ஒரு போட்டோ எடுத்தேன்.
ஓம் த்ரியம்பகம் யஜா மஹே, சுகந்திம் புஷ்டி வர்தனம்;
உருவாருகமிவ பந்தனான், ம்ரித்யோர் மோக்ஷியே மா
(அ)ம்ருதாத்
இந்த மந்திரத்தின் பொருள், 'மூன்று கண்களை உடைய, சுகந்தமான நறுமணத்தை உடைய, நம் எல்லோருக்கும் உணவு அளிப்பவரும், நம்மை வளர்ச்சி அடைய செய்பவருமான சிவ பெருமானை போற்றி வணங்குகிறோம். விளா பழம் எப்படி தன் காம்பில் இருந்து பிரிந்து விழுகிறதோ, அதே போல நம்மை பந்தங்களில் இருந்து விடுவித்து, மரணம் என்னும் பயத்தில் இருந்து விடுவித்து, அழியாத நிலை அதாவது மோக்ஷ நிலை அடைய செய்வாயாக, என்றும் அழியாதவனே ஈஸ்வரா"
அந்த ஈசன் எப்படி வேண்டுமானாலும் யார் மூலமாவது ஏதேனும் ஒரு செய்தியை நமக்குச் சொல்லி உணர்த்துகிறான். இங்கே பதிவிட ஒரு கருப்பொருளையும் கண்ணில் காட்டிவிட்டான்.
Image may contain: one or more people

திங்கள், 21 மே, 2018

வேதங்கள் போற்றும் கந்தன்

பிரம்மனின் மானச மயபுத்திரர்களில் ஒருவர்தான் ஸனத்குமரார். இவர் சிவனை நோக்கி தவம் இயற்றினார். மகிழ்ந்த சிவசக்தி நேரே எழுந்துஅருளி, 'உனக்கு என்ன வேண்டும்? கேள்" என்றார். அதற்கு ஸனத்குமரர் விளையாட்டாக, 'எனக்கு ஒன்றும் வேண்டாம் உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்" என்றார். உடனே சிவா, "எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும்' என்று சொல்கிறார். 'உமையவள் மௌனமாய் இருக்க நீங்கள் மட்டும் கோரியதால் உங்களுக்கே மகனாவேன்' என்கிறார் சனத்குமாரர்.
அசுரர்களை வதம் செய்யவேண்டி ஒரு இளம் வீரனை அனுப்புங்கள் என்று தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைத்தனர். சிவன் தன் பஞ்சமுகம் மற்றும் ஆகாயத்தைப் பார்க்கும் புலப்படாத அதோமுகம் சேர்த்து, ஆறு நெற்றிக்கண்களில் இருந்து ஆக்ஞா சக்கர ஜோதியை ஆகாயத்தில் வீசினார். அது பொய்கையில் விழுந்து கார்த்திகேயன் என்ற குழந்தையாக உருவானது. அதனால்தான் முருகனுக்கும் ஆறுமுகம்.
ரிக்-யஜுர் வேதங்களில் கார்த்திகேய, ஸ்கந்தா, ஷண்முக, குஹா, அக்னிபுத்ரா, சுப்ரமணியா, என்று பல்வேறு பெயர்கள் வருகிறது. 'பூமியில் பொத்திவைத்து வளர்க்கப்பட்ட பாலன், ஸ்கந்தன்', 'தந்தை வணங்கிய குமாரன்' 'இளம் அழகன் சுவாமிநாத' என்று அற்புதமாக சொல்லபட்டுள்ளது. அவன் நெற்றிகண்ணிலிருந்து நேரடியாக உதித்தான் என்று வேதங்களும், திருமுருகாற்றுப்படையும் சொன்னாலும்; அவனுடைய மூல உருவம் எது? அவன் யார்? என்று பார்த்தீரானால், அவனே வாமதேவ முகத்து மயபுத்திரர் சனத்குமாரர். ஈசனின் வாமதேவம் (இடது பாகம்) விஷ்ணுவும் அவன் சகோதரிக்கும் உடையது. மாலும்-மருகனும் ஒன்று என்றால் முருகனும் விஷ்ணு தோன்றிய வாமதேவ அம்சம்தானே இருக்க வேண்டும்? அதனால்தான் விஷ்ணுவை 'மாயோன்' என்கிறோம். மருகனுக்கும் குறிக்கும்.
முருகன் என்ற பெயர் வேதங்களில் எங்கும் இல்லை. சிவன் தென்னகத்திற்கு அகத்தியரை அனுப்பி குமரனின் ஆசியுடன் தமிழ் வளர்ப்பாய் என்று ஆசி கூறினார். அப்போதுதான் 'முருகன்' என்ற பெயர் உதயமாகிறது. பிற்காலத்தில் சங்கம் வளர்த்த தமிழ்க்கு அவனே பாட்டுடைத் தலைவன் ஆகிறான். சசமஸ்கிருதம், தமிழ்.. இதில் எது முதலானது? சமஸ்கிருதமே! வேதங்கள் எல்லாம் எழுதா கிளவியாக கேட்கப்பட்டு கிரகிக்கபட்டன. அது தேவமொழியாகவே நிலைத்து விட்டது. கார்த்திகேயன் வேதகாலம் தொடங்கும்போதே சிருஷ்டி ஆகிவிட்டான் என்று வேதங்கள் சொல்கிறதே. முதலிலேயே தமிழ் வந்திருந்தால் விராட் பஞ்சமுகத்தான் வேதங்களை தமிழில் சொல்லாது ஏன் சமஸ்கிருதத்தில் படைக்க வேண்டும்? பிற்பாடு இரு மொழிகளிலும் தாக்கம் வந்து காலபோக்கில் பல திரிபுகள் சொல்லாடல்கள் நடந்திருக்கும். யாம் அறியோம்!
பதஞ்ஜலி வியாக்கரண இதை சொல்லும்போது, ஈசன் மொத்தம் நவபஞ்ச (9+5) முறைதான் உடுக்கை அடித்தான். அதிலிருந்துதான் பீஜ அட்சரங்கள் எல்லாமே தோன்றியது என்கிறது. 'தான் வந்த விதம் எப்படி?' என்று விளக்கமாக அகத்தியருக்கு முருகன் உரைத்துள்ளான். ஈசன் 'ஓம்' என்றதும், உடனே பிரபஞ்சம் முழுக்க படைப்புத் தொழில் நடந்தேறியது என்று முருகன் சொல்கிறான். வேதகாலத்தில் அக்னி சுவரூபமாக கார்த்திகேயனை வழிபட்டுள்ளனர். தமிழ்க் கடவுளாக தனக்கு சிவன்தான் பன்னிருகையோன், வேலவன் என்று பெயரிட்டதாகச் சொல்கிறான். முருகன் தெற்கில் மட்டுமல்ல, வடக்கிலும் வணங்கப்படுகிறான்.
பிற்பாடு இங்கே குறிஞ்சிநில ஆதிகுடிகளின் தலைவனாக தோன்றும் போதுதான் 'தமிழ்' படைக்கிறான். ஆகவே, முறைப்படி எழுத்துகள் கொண்டு, ஒரு பண்பட்ட மூத்தமொழியாக தமிழ் உதயமாகியது. அதுவரை சமஸ்கிருதம் பூமியில் பேசப்படவில்லை. ஆக, தமிழும் தமிழனும் வேதகாலத்திலேயே தோன்றியவை என்று சொல்வேன். 'சுப்ரமணியனின் வயது என்ன என்று கேட்டால், அதன் தொகைக் கணக்கு செப்ப முடியாதப்பா' என்று சித்தர்கள் சொல்கிறார்கள். பெருவெடிப்பு ஏற்பட்டபொது பிரபஞ்சம் தோன்றியது என்று வைத்துக்கொண்டால், சுமார் 14பில்லியன் ஆண்டுகள் இருக்குமோ என்னவோ! ஆகவே, முருகன் மயன் வழித்தோன்றி ஈசனின் நெற்றிக்கண்ணில் அக்னிமழையாக மாறினான். தந்தை குழந்தை பெற்றான், தாய் பெயர் சூட்டினாள். அவனை வாமதேவ முகத்தோன் என்பதால் வேங்கட சுப்ரமணியம், கந்தம்பெருமாள், கலியுக வரதன், என்று தொடர்பு படுத்தி பெயர் வைக்கிறோம். முருகனுடைய குல வழி சஸ்பென்ஸ் தெரிந்துகொண்டீர்களா?
Image may contain: text

செவ்வாய், 15 மே, 2018

சௌகார் ஜானகி : The legend

பழம்பெரும் நடிகைகளில் இவர் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்துபவர். 1949ல் 'ஷவ்காரு' என்ற தெலுங்கு படத்தில் என்.டி.ராமாராவுக்கு இணையாக முதலில் அறிமுகம் ஆனார். நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களைவிட அனுபவத்திலும் வயதிலும் பெரியவர். அவர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் சாவித்திரி அவர்கள் வாய்ப்பு கேட்டு சென்னைக்கு வந்தார்.
சௌகார் அவர்கள் பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர் என்றாலும் வீட்டிற்கே ஆசிரியரை வரவைத்து கற்றுக்கொண்டவர். அவுர் பேசும் ஆங்கிலம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஓர் ஆங்கில இதழுக்காக அவரை பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் பேட்டி கண்டபோது பல விஷயங்களைப் பேசினார்.
"நீ பெரிய பெண்ணாகி விட்டாய் இனி உனக்கு திருமணம்தான்" என்று தன் தந்தை சொன்னாராம். வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்டு 1947ல் திருமணம் நடந்தது. அவருடைய கணவர் ரேடியோ மெக்கேனிக். பெரிய சம்பாத்தியம் என்று ஏதுமில்லை. அப்போது இவர் வானொலியில் A grade artiste ஆக இருந்தேன் என்றார். அதன் பிற்பாடு ஒலிச்சித்திரம் மூலம் பிரபலமாகி, அவருடைய dialogue delivery அருமையாய் இருக்கவே, விஜயா புரோடக்ஷன்ஸ் இவரை 'ஷவ்காரு' படத்திற்கு ஒப்பந்தம் செய்து அது வெற்றிகண்டது.
Image may contain: 2 people, closeup
அவருக்குப் பிற்பாடு வந்த சாவித்திரி நீர் குமிழிபோல் வந்து காணாது போய்விட்டார். ஆனால் சௌகார் ஜானகி அவர்கள் 65 ஆண்டுகளாக இன்னும் நடித்து வருகிறார்கள். எல்லா முன்னணி கதாநாயகர்களோடு நடித்து விட்டார். உரையாடலில் அவர் சொன்ன சில விஷயங்கள்:
1. பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டியதுதான் ஆனால் அது கல்வி மற்றும் முன்னேற்றத்தில் மட்டும் இருக்கவேண்டும். மண வாழ்க்கை, உடை, சகவாச பழக்கம் எல்லாமே நம் போக்கில் போகக் கூடாது. அதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். இள வயதில் இவை நமக்குப் பிடிக்காதுதான். ஆனால் அதுதான் பாதுகாப்பு. பெரியவர்கள் பேச்சைக் கேட்க வேண்டும். பிறகு விதிவிட்ட வழி.
2. சம்பாதிப்பது பெரிதல்ல, அதை எப்படி பயன்படுத்தி, முதலீடு செய்து, எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக வைக்கிறோம் என்பது முக்கியம்.
3. நடிப்பு மட்டுமே எனக்குத் தெரியும். அதனால் அதை மட்டும் செய்வேன். தயாரிப்பாளர் ஆவதோ, படம் எடுப்பதோ, இயக்குனர் ஆவதோ இதெல்லாம் ஒரு நடிகை சிந்திக்கக் கூடாது. தனக்கு என்ன தெரியுமோ அதில் ஸ்திரமாக இருக்கவேண்டும். எனக்கு வசனம் பேச/ நடிக்க வரும், சமைக்க வரும், தோட்டக்கலை பிடிக்கும். அதைத்தாண்டி என் நேரத்தையும் பணத்தையும் சினிமாவில் போட விரும்பமாட்டேன்.
4. சினிமாத்துறையில் கத்திமீது நடப்பதுபோல் போக வேண்டும். நம் மனோபலம் முக்கியம்.
5. நம்மைச் சுற்றி இருப்போரை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர் பட்டுத்தெரிந்து கொண்டதை நாமும் பாடமாக ஏற்க வேண்டும். பேராசை படாமல், அளவான உயர்வு நோக்கி Measured stepsல் வாழ்க்கை பயணித்தால் போதும். வெற்றி தானே வரும்.
6. Discipline தேவை. நல்ல பழக்கங்கள், உணவு கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் பேணவேண்டும். நம்மை நம்பி ஒரு குடும்பம் உள்ளதை மறக்கக் கூடாது.
7. கண்ணில் பட்ட எல்லாவற்றுக்கும் ஆசைப்படக் கூடாது. அது உண்மையல்ல என்பதை நம் ஆழ்மனம் நமக்கு உணர்த்தும், நாம் செவி மடுத்துக் கேட்க வேண்டும். Wavering mind is bad.
8. வீட்டில் சமைத்தபின் சாப்பாட்டை ஸ்டுடியோவிற்கு கேரியரில் கொண்டுவருவேன். கைக்குழந்தையோடு வருவேன். இப்படியெல்லாம் எதிர்நீச்சல் போட்டு இன்று கொள்ளுப்பாட்டியாக நான் வளர்ந்துள்ளேன்.
9.படவாய்ப்பு குறைந்தபோது கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். கவுஹாத்தி பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றேன். Arizona State University யில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றேன்.
10. அமெரிக்காவில் என் பிள்ளை வீட்டில் இருந்தபோது பொழுது போகவில்லை என்பதால் அருகே ஒரு உணவகத்தில் Indian cuisines சமைக்கப் போனேன். நான் நடிகை என்பது அங்கு தெரியாமல் இருந்தது. ஆனால் நம்மூர் ஆசாமி யாரோ என்னைப் பார்த்துவிட்டு, "சௌவ்காரின் பரிதாப நிலை. ஓட்டலில் வேலைசெய்து பிழைப்பு நடத்துகிறார்" என்று தமிழ் பத்தரிகையில் வதந்தி பரப்பிவிட, 'ஐயோ பாவம், அவ்ளோ சம்பாதிச்சதை என்ன செய்தாளோ?" என்று விமர்சனம் வரும் அளவுக்கு மக்கள் மனதை அது மாற்றிவிடுகிறது. Rumour mill is grinding fiction என்றார்.
11. சென்னையில் Cenotaph Roadல் இருந்த மிகப்பெரிய வீட்டை இனியும் என்னால் பராமரிக்க முடியாது என்பதால் விற்றுவிட்டேன். எல்லாவித பூஞ்செடிகளும் தோட்டத்தில் போட்டிருந்தேன்' என்றார். முத்தாய்ப்பாக, Enjoy a peaceful life என்றார். தற்போது பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார் என்று அறிகிறேன்.

என்ன நண்பர்களே! இந்த 87 வயது இளம்பெண் பேசியதைக் கேட்கும்போது நமக்கே தன்னம்பிக்கையும் உத்வேகமும் வருகிறது அல்லவா?

திங்கள், 14 மே, 2018

நடிகையர் திலகம் మహానటి

முதல் பகுதி பரபரப்பு இல்லாமல் மெதுவாக நகர்ந்தது. சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் முடிந்தவரை அப்படியே சாவித்திரியின் நடை-பேச்சு-முக பாவங்களை 80% கொண்டுவர முயற்சி செய்துள்ளார். மற்ற கதாபத்திரங்களான, தாய் சுபத்ரம்மா, நாகி ரெட்டி (பிரகாஷ் ராஜ்), ரங்கா ராவ், எல்.வி.பிரசாத் ஓரளவுக்கு மத்திம ஷாட் காட்டும் போதும் கச்சிதமாகவே உருவ ஒற்றுமை உள்ளது. துல்கர் சல்மான், ஜெமினி கணேசனாக வருகிறார். சிறுவயது தோற்றம் சுருள் முடி, பாவம் எல்லாமே பார்க்கும்படி இருந்தது. இரண்டாம் பகுதியில்தான் நடிகையார் திலகமாகி புகழ் உச்சிக்குப் போனது, மகாராணியாக வாழ்ந்தது, அவருடைய கால்ஷீட் பெற தயாரிப்பாளர்கள் காத்திருந்த காட்சிகள் மிகுந்த சுவாரசியத்தைத் தந்தது. தமிழ் தெரியாமல் வந்து இங்கு தமிழ் சினிமாவை ஆண்டது அபாரம்!
Image may contain: 4 people, people smiling, closeup
விஜயாவாகினி ஸ்டுடியோ (இன்றுள்ள கிரீன் பார்க் & போரம் மால்) இடிக்கப்படும்முன் இருபது வருடங்களுக்குமுன் எப்படி இருந்ததோ அப்படியே செட் போட்டு எடுத்தள்ளது அருமை. சாவித்திரியின் கதை அநேகமாக எல்லோருக்குமே தெரியும் என்றாலும் அவரைப்பற்றி உண்மைக்குப் புறம்பான வதந்திகள் அக்காலத்தில் பரப்பி விடப்பட்டது தெரிகிறது. திரைக்கதை உண்மையைத்தான் காட்டியுள்ளதா என்பதை சாவித்திரியின் மகள் திருமதி.விஜய சாமுண்டேஸ்வரி மற்றும் மகன் திரு.சதீஷ், ஆகியோர் சரிபார்த்து ஒப்புதல் அளித்தபிறகுதான் படபிடிப்பு தொடங்கியது என்றனர்.
சாவித்திரி அதுவரை சம்பாதித்த பங்களாக்கள், கார்கள், ஆபரணங்கள், ரொக்கம் என்று எல்லாமே ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்தது கொண்டதுமே ஒவ்வொன்றாக கைவிட்டுப்போனது என்பதை ஊரே அறியும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் விதி வசம் மதி சென்றது. அதுவரை படம் எடுக்க யோசனை இல்லாதிருந்த அவர் யாரோ கொடுத்த உந்துதலில் படம் எடுத்து பெரும் செல்வத்தை இழந்தார். எழுபதுகளின் பிற்பகுதியில் வருமானவரித்துறை பிரச்சனையில் அவர் பார்த்துப்பார்த்து கட்டிய தி.நகர் வீடு ஜப்தி செய்யப்பட்டது. அதை மறக்க மதுவுக்கு அடிமையானார்.
கணக்கு வழக்கின்றி தானதர்மங்களைச் செய்தும் அவர் ஏன் அல்லல்பட்டு கடைசியில் 45 வது வயதில் கோமாவில் கிடந்தது போனார்? அதுதான் ஊழ்வினை. அவர் செய்த தாராளக் கொடையும் தேசத்தொண்டும் இன்று அவருடைய வாரிசுகளைக் காக்கிறது. தென்னிந்தியாவின் முதல் பையோபிக் படம் என்ற முறையில் நாக அஷ்வின் எடுத்த இப்படம் அசத்தல்.

சனி, 12 மே, 2018

அக்னி!

நாம் உண்ணும் உணவுகளின் குறைந்தபட்ச செரிமான நேரம் எவ்வளவு?
தர்பூஸ் 20 நிமடங்கள்
தக்காளி 30 நிமடங்கள்
வாழைப்பழம் 50 நிமடங்கள்
பால் 1 மணிநேரம்
அரிசி/கீரை/காய்கறிகள் 1.5 மணிநேரம்
மீன் 1.5 மணிநேரம்
பருப்பு/நட்ஸ்/சீஸ் கொழுப்பு 3 மணிநேரம்
சிக்கன் 4 மணிநேரம்
இறைச்சி 8 மணிநேரம்
பர்கர்/பிட்சா 12 மணிநேரம்
சூரிய சக்தியின் காரணமாகவும், உடல் தன்மையையும், வயிற்றில் அக்னியின் அளவைப் பொறுத்தும் இந்த செரிமான நேரம் அமைகிறது. மந்த அக்னி, குடலில் மெதுவான நகர்வு, குடல் புழு, இவற்றின் காரணத்தால் செரிமான நேரம் இரண்டு மடங்கு அதிகமாகும்.
குடல் சுத்தமாக இருந்தாலே ஆயிரக்கணக்கான நோய்கள் அண்டாது என்பது சித்த வைத்திய கோட்பாடு. இறைச்சி சமைக்கும்போது என்னதான் புதினா, சோம்பு, மசாலா, இஞ்சு, பூண்டு அரைத்து ஊற்றினாலும், குடல் என்னும் கிடங்கில் தேங்கிய குப்பை 'கமகம' க்கும். ஆக, தினப்படி உணவு கிடைப்பதற்கு அன்னபூரணியின் தயவு வேண்டும்; உண்டி முதல் குண்டி வரை அது எரிந்து சக்தியாக கிரகிக்கப்பட வைத்தீசனின் தயவு வேண்டும். சிவனும்-சக்தியும் இல்லாமல் நம் உடல் இயங்குமோ? அரைத்து செரித்த உணவை குடலில் பஞ்ச பூதங்களாகப் பிரிப்பதும் அவனே!
"பேணிற் பிறவா உலகருள் செய்திடும் காணில் தனது கல்வியுளே நிற்கும்
நாணில் நரகநெறிக்கே வழிசெயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே" என்கிறது திருமந்திரம்.
No automatic alt text available.

வெள்ளி, 11 மே, 2018

செருப்பும் விளக்குமாறும்

செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்ற* முருகன் பாட்டு – புலவர் காளமேகம்
ஒரு புலவர்காளமேகத்திடம் கேட்டடாராம்
“ஐயா., நீர் பரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே., உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா..?”
“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா..? மயிலில் தொடங்கவா..?” என்றாராம் காளமேகம்.
*”வேலிலும் தொடங்க வேண்டாம்., மயிலிலும் தொடங்க வேண்டாம்... செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்”*
என்று குசும்பாகக் கூறிவிட்டராம் போட்டிப் புலவர் என்ன கொடுமை..? செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா..? தகுமா..? முறையா..? அதை தகும் என்றும்., முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தாராம் காளமேகம்....
இப்படி

செருப்புக்கு வீர்களை சென்றுழக்கும் வேலன் 
பொருப்புக்கு நாயகனை புல்ல - மருப்புக்கு 
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் 
வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே

செரு என்றால் போர்க்களம்.
செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படி போர்க்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே., அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்..
விளக்குமாறு என்பதற்கு விளக்கம்., சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா?
இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு..!
Image result for murugan

வியாழன், 10 மே, 2018

பொங்கும் இறைசக்தி

ஒவ்வொருவரும் ஆன்மிகத்தில் முன்னேற்றம் பெற முயற்சி செய்து, அதற்கான வழிகளை யார் சொன்னாலும், அது எங்கு கண்ணில் பட்டாலும் படித்து விடுவது இயல்பு. ஒரு விஷயம் சொல்கிறேன். எனக்குக் கிடைத்த அதே உணர்வும் இறை அனுபவமும் அப்படியேதான் உங்களுக்கும் நடக்க வேண்டும் என்றில்லை. திருமூலர் முதல் கடைக்கோடி சித்தர் வரை அந்த மார்க்கத்தைப் பற்றி ஆய்ந்து சொல்லியுள்ளார்கள். அது சித்தமரபு ஆகம நெறிகளை பின்பற்றி நடப்பவர்களுக்குப் பொருந்தும். ஆனால் நமக்கு அது அப்படியே நடக்காதபோது உடனே ஏமாந்து போய்விடக் கூடாது.

பால் காய்ச்சினால் அது பொங்கி வழிவது இயல்பு. ஆனால் சிலர் காய்ச்சும்போது அது பொங்கி ஒரு கட்டத்தில் ஏடுகட்டி நின்றுவிடும், வழியாது. சிலர் கரண்டி போட்டு கிண்டிக்கொண்டே இருக்க அது பொங்காது. சிலர் அதன் தலையில் தண்ணீர் தெளிக்க பொங்குவது அடங்கி கொதித்துக் கொண்டிருக்கும். சில சமயம் அடிபிடிக்கும். சல சமயம் அடி பிடிக்காது ஆனால் பாலில் பச்சிலை வாடை போன்று வரும். சில சமயம் காய்ச்சும்போதே 'டப்...டுப்' என்ற சப்தத்தோடு பால் உடையும். ஆக, பால் காய்ச்சும் விஷயத்திலேயே இத்தனை விதங்களும் முடிவுகளும் உள்ளதென்றால் சுயம்தேடலில் எத்தனைவித ஆய்வுகளும் முடிவுகளும் வெளிப்படும்! கணக்கே இல்லை. ஆனால் எல்லோர்க்கும் ஓர் அனுபவம் கிட்டியது. அது பொய் அல்ல.
Image may contain: foodபால் காய்ச்சுவதில் ஏன் இத்தனை அனுபவங்கள்? பாத்திரம் சன்னம்/கனம், சிறியது/பெரியது, பாத்திரம் மாசுபட்டது, தீயின் அளவு, கரண்டியின் தரம், தெளித்த நீரின் தன்மை, கால்நடை உண்ட தீவனத்தின் கலவை, கால்நடைக்கு போட்ட ஊசிமருந்தின் விளைவு, இப்படி எத்தனையோ விஷயத்த்தைச் சார்ந்தது. தீயில் கோளாறு என்று ஒருபோதும் குறை சொல்லமுடியாது. மற்றவை எல்லாமே பாண்டம் / பண்டம் மற்றும் அதன் சகவாச தொடர்பில் உள்ள பொருள்களின் தன்மைக்கு ஏற்ப அமைகிறது என்பதை அறிகிறோம்.
இப்படித்தான் நமக்குள் இறை உணர்வு வந்து வெளிப்படும் அனுபவங்கள் இருக்கும். சில சமயம் சித்தர் சொன்னபடி நீண்ட நெடிய பயிற்சியின்றி சுருக்க முடிவை எட்டிடலாம். இன்னும் சிலர் பல காலங்களாக முயன்றும் புருவ மத்தியில் ஜோதி காணாது 'டார்ச்' அடிச்சுதான் பார்க்கணுமோ என்று நகைச்சுவையாகப் பேசுவார்கள். ஒருவர் ஒரு தத்துவத்தைச் சொன்னால் அது நமக்கு புதிதுபோல் தென்படும், ஆனால் இல்லை. பால் காய்ச்சிய விதத்தை அறிந்து தக்கபடி செயல்படுவதுபோல் ஆன்மிக முன்னேற்றத்திலும் வெற்றி கொள்ளலாம். நாம்தான் பாண்டம், நம் மனதை சுத்தி செய்வதும் மாசுபடுத்துவதும் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்கள் என்பது புலப்படும்.
ஊரில் எங்கள் பாட்டிக்கு மைசூர்பாகு செய்ய வராது. கடைசிவரை அவர் அதன் நெளிவு சுழிவுகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டமலே போய்ச்சேர்ந்தார். கண்பார்வை தீர்க்கமாக இருந்தது என்றாலும், எப்போதும் அதிக முதிர்பதத்தில் சர்க்கரைப்பாகு காய்ச்சி தவறு செய்வார். "பாட்டி மைசூர்பாகு ஏன் கல்லு போல இருக்கு?' என்று கேட்பேன், "ரேசன்ல வாங்கின சர்க்கரையில ஏதோ கோளாறு போலிருக்குடா...  அடுத்த வாட்டி மளிகைக் கடையில் போய் வாங்கணும்" என்று தன்மீது தவறில்லாததுபோல் பேசுவார். இதுவும் ஓர் அனுபவமே!

இராம நாமம்

சிவவாக்கியத்தில் உள்ள சில பாடல் வரிகளை இங்கே இடுகிறேன்.

சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
என்தைராம ராமராம ராம என்னும் நாமமே
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராமராம ராமஎன்னும் நாமமே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம என்ற நாமமே
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே.
தெளியுமங்கை உடனிருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமவிந்த நாமமே
மாரமார மாரமார மரங்களேழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராமவென்னும் நாமமே.
- (சிவவாக்கியர்)
'இராமா.. இராமா' என்று எப்படியேனும் பகிரங்கமாக வாய்விட்டு உரக்கச் சொல்லி பிராயச்சித்தம் தேடிக்கொள்ள இது ஒரு நல்ல நூதன தந்திரம். நாம ஜெபமும் செய்யவேண்டும் ஆனால் பகுத்தறிவு நாத்திகமும் வெளிப்படவேண்டும் என்ற தீவிர உறுதியோடும் திட்டத்தோடும் இருக்கும் திரு.கி.சாரங்கபாணியை பாராட்டாமல் இருக்கவே முடியாது. தன்னை நம்பி வந்த நாத்திக கருஞ்சட்டை தொண்டர்களும் 'இராம' நாமம் ஜெபித்து பாப நிவர்த்தி பெற தன்னாலான உபாயம்தான் இந்த பொதுக்கூட்ட உரை. சபாஷ்!

புதன், 9 மே, 2018

ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்!

மதங்கள்-சாதிகள்-குலங்கள் இருக்கக் கூடாது என்று எல்லோருமே சொல்லி வருவார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் பின்னணியில் பல நுட்பங்கள் பொதிந்துள்ளது என்பது சமத்துவமும் சாதிமறுப்பு பேசுபவர்களுக்கும் எப்போதுமே தெரிய வாய்ப்பில்லை.
ஷத்ரியன், பிராமணன், சூத்திரன், வைசியன், கிறித்துவன், முஸ்லிம், என்று எல்லா பிரிவுகளிலும் இத்தேசம் முழுக்க பல ஜெனனங்களை சுழற்சியில் எடுத்துவிட்டு புத்தி இல்லாமல் இன்றைக்கு ஏதோ ஒரு சாதியில் பிறந்து நிற்கிறோம். பல பிரிவுகளில் புதைந்தும் எரிந்தும் எப்படியோ உடல் போனது. ஆன்மா மௌனமாய் காலி செய்துவிட்டு வெளியேறியது. இப்பிறவிகளின் பயன் என்ன? நாம் பிறப்பதை எப்போது நிறுத்துவோம்?
ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாணவன் இருக்கிறான். அவன் சூட்டிகை இல்லை. தட்டுத்தடுமாறி ஒவ்வொரு வகுப்பிலும் தர்ம ப்ரமோஷன் பெற்று எப்படியோ பத்தாம் வகுப்பு வரை வந்து விட்டான். ஆனால் பலமுறை தேர்வு எழுதியும் பாஸ் மார்க் வாங்க முடியவில்லை. "ஏண்டா, இன்னுமா பத்தாங்கிளாஸ்? இத்தனை முறை எழுதியுமா பாஸ் ஆகல? உனக்கே குத்துமதிப்பா இந்த கேள்விக்கு இதுதான் சரியான விடைன்னு இந்நேரம் தெரிஞ்சிருக்கணுமே! மக்கு பிளாஸ்திரி... ஆளு மட்டும் ஜோரா மைனர் மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு போறதுல மட்டும் குறைச்சலில்லை" என்று திட்டுவதைப் பார்த்துள்ளோம்.
நாம் அந்த மாணவனின் நிலையில்தான் உள்ளோம். பல வகுப்புகள் படித்தும்கூட (பல சாதிகளில் பிறப்புகள் எடுத்தும்கூட) பத்தாம் வகுப்பை (வீடுபேறு அடையாமல்) தாண்டத் தெரியாமல் இருக்கிறோம். ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு தொழில் ரகசியம் இருக்கிறது அதை பலபேர் அறியார். இன்னும் உயர் வகுப்புகளுக்குப் போகும்போது ஞானம் கிட்டும். அதே ஞானத்தை வெகுசிலர் பத்தாம் வகுப்பிலேயே பெறுவதும் உண்டு.
ஒருவருக்கு இயல்பாகவே கைவினை பொருள் செய்ய, அடிப்படை தச்சு வேலை பார்க்க, சமைக்க, கவிதை பாட, சிலம்பம் சுற்ற, வடமொழி மந்திரங்கள் சொல்ல, தோட்டக்கலை பார்க்க, துணி தைக்க, வியாபார நுணுக்கம் அறிந்து தொழில் செய்ய,.. என்று பலதும் செய்ய முடியும் என்றால் அதன் பின்புலத்தில் அவன் கடந்து வந்த வகுப்புகளில் படித்தவை கைகொடுத்தது என்பதுதான் பொருள். உயரவுயரப் போகாமால் ஒரே வகுப்பிலேயே இருந்தால் அந்த பாடத்திட்டத்தில் இத்தனையும் கற்க முடியாது. ஆக, நாம் இத்தனை சாதிகளில் குலங்களில் பிறந்து பல வகுப்புகளை /பள்ளிகளைக் கண்டுள்ளோம் என்பதே மெய். சமத்துவம் என்பது ஒருவரை ஒருவர் நோக்கும் பாவனையே தவிர மற்றபடி வேறேதுமில்லை. அப்படிப் பார்த்தால் நம் ஆன்மா சமத்துவமாக எல்லா சாதிகளிலும் இருந்துள்ளது. சமத்துவம் வேண்டும் என்றால், இவ்வுலகில் சிவன் சமத்துவத்தோடு எல்லோரையுமே செல்வந்தனாகவோ (அ) ஏழையாகவோ ஏன் படைக்கவில்லை? ஏன் இந்த வஞ்சனை?
“முதுகலை முடிச்சே, ஆய்வு பட்டம் வாங்கிட்ட... படிச்சது போதும். இதை வெச்சி ஸ்திரமான பாதையில போகப் பார்” என்று சொல்வோர் உண்டு. ஆன்மிக பாதையில் உருப்படவேண்டும் என்றால் சிலருக்கு பத்தாம் வகுப்பே போதுமானது, சிலருக்கு முதுகலையும் போதாது.
நமக்கு ஒவ்வொரு வகுப்பிலும் (பிறவியிலும்) இனிப்பான-கசப்பான பல அனுபவங்கள் நடந்திருக்கும். நண்பர்கள்-எதிரிகள் வருவார்கள். அதெல்லாம் ஆன்மா பெற்ற ஞானம்.. தேர்வு முடிவுகள் வெளியாகி “நான் பாஸ் ஆயிட்டேன்” (வீடுபேறு பெற்றேன்) என்றால் நம் பெற்றோர் (சிவ-சக்தி) மகிழ்ந்து போவார்கள்.
Image may contain: 3 people, people smiling, people standing and outdoor

வந்த வழியே போகும்

வருடம்: 1945-55
இடம்: பம்பாய் 
மட்டுங்கா பகுதியில் ஒரு குடும்பத் தலைவர் நுகர்பொருள் பண்டக சாலையில் கொள்முதல் அதிகாரியாக இருந்தார். அக்காலத்தில் கப்பலில் பல சாமான்கள் வரும். பழைய உடைகள், பூட்ஸ், இத்தியாதிகளை போட்டுகொண்டு போவார். வரும்போது அதை அங்கே வீசிவிட்டு புதிய இறக்குமதியான பொருளை அணிந்து வருவார். அரசாங்கத்தின் பண்டகசாலையே இவருடையது போல் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் செய்வதில் ஒரு பாய் நண்பர் கூட்டு. அக்கம்பக்கத்தில் எல்லோருக்கும் தாராள விநியோகமும், விற்பனையும் ஜரூராக நடத்தி பொருள் ஈட்டினார். புகை/மது எல்லாமே இருந்தது. அவருக்கு ஒரே மகன்.
வருடம்: 1964-91
இடம்: பம்பாய் / மாயுரம்
வங்கியில் பணிபுரியும் அம்மகனுக்குத் திருமணம் செய்தார். ஊரில் வீடு, நூறு பவுன் நகைகள், என்று மகனுக்கு சேர்த்து வைத்தார். திருமணம் செய்து வைத்தபிறகு அக்குடும்பத் தலைவர்-தலைவு இறந்து போகிறார்கள். மகன் மகாகருமியாக இருந்தார். அவருக்கு வலிப்பு வந்து விழும் மனைவி. ஒரு மகன், மகள். குழந்தைகள் படித்து வளர்ந்தனர். குடும்ப சொத்துகள்/செல்வம் ஏராளம். இவரும் தன் மகனுக்கும் மகளுக்கும் வங்கியில் நிறைய சேர்த்து வைத்தார் . ரியல் எஸ்டேட் செய்யும் மகன் மராத்தி பெண்ணை காதல்மணம் செய்துக்கொண்டான். மகள் ஒரு பஞ்ஜாபி இந்துவை மணந்தாள்.
வருடம்: 1992-2014
இடம்: பம்பாய்/பூனா
அண்ணன் தங்கையின் வாழ்க்கை நன்கு ஓடிக்கொண்டிருந்தது. கருமி தாய்-தந்தை மாண்டார்கள். கொடுக்கல்/வாங்கலில் புத்திசாலியான மகன், தன் தொழிலில் எல்லாவற்றையும் முதலீடு செய்தான். நிறைய பணம் சம்பாதித்தான். அங்கு குஜராத்தி /மார்வாரியுடன் கூட்டு வைத்தான். திடீரென்று ஒருநாள் எதிர்பாராமல் நெருக்கடி ஏற்பட, கூட்டாளிகள் இவன் மென்னியைப் பிடித்தனர். பணம் தயார் செய்துவிட்டு வருவதாகச்  சொல்லிவிட்டு கர்நாடகா பக்கம் ரத யாத்திரைக்கு வந்தவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டான். இவனுடைய எஞ்சிய சொற்ப செல்வம் என்ன இருந்ததோ அது அந்த மராத்தி பெண்ணுக்குச் சென்றது. அவள் தன் மகளை வளர்த்து வந்தாள். அவன் தங்கையின் சீர் நகைகளை அவளுடைய பஞ்சாபி கணவன் தொடாமல் இருந்தானா என்பது தெரியவில்லை. அக்குடும்பத்தை நான் நன்கு அறிவேன், ஆனால் அதில் பெரும்பாலானோர் இன்று உயிரோடு இல்லை.
ஈசன் சரியாக ஊழ்வினை ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்தான் என்பதை நினைத்து கைத்தட்டிப் பாராட்டுவதா? அதர்ம வழியில் பொருளீட்டி வந்தவை எல்லாமே போய்விட்ட தாற்பரியம் பற்றி சிந்திப்பதா? பாட்டன் சேர்த்துவைத்த பெரும் பணமும் பாவமும் பேரன் தலையில் விழுந்து கதை முடிந்தது!
மூதாதையரின் புண்ணியமும் சொத்தும் நமக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, பாவம் மட்டும் வந்துவிடக் கூடாது. ஆனால் அது நம் கைகளில் இல்லை. அதனால் முடிந்தவரை தர்மநெறியோடு வாழுங்கள்.
Image may contain: 1 person, text

செவ்வாய், 8 மே, 2018

மௌன சாட்சி!

"அரசு ஊழியர்களும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஆசிரியர்களும் இன்று மறியலில் ஈடுபட்டனர்."
இதுதான் இன்று ஸ்க்ராலிங் நியுஸ். மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல், ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.
Image may contain: drawingஎன்னுடைய தாத்தா எங்கள் ஊரில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1960களில் அவருடைய ஊதியம் Rs. 75-5-125-10-175 என்பதை ஊரில் அவருடைய பழைய பணியோய்வு புத்தகத்தில் பார்த்துள்ளேன். அவர் கைக்கு ஓய்வூதியம் ரூ.100 வந்திருந்தால் அதிகம். இன்றைக்கு செய்வது போன்ற ஒரு மறியல் போராட்டம் அன்று பெரிய அளவில் நடந்திருக்குமா என்பது எனக்குத் தெரியாது.
அவருடைய தன்னலமற்ற சமத்துவ நோக்கு (Selfless and Secular) பற்றிய என்னுடைய அரைப்பக்க ஆங்கில கட்டுரை, 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு The Hindu நாளேடில் Open Page பகுதியில் பிரசுரமானது. அதற்கு கார்டூனிஸ்ட் திரு.கேஷவ் அருமையாகப் படம் வரைந்திருந்தார். ஆசிரியர்களுக்கு இன்று கிடைத்துள்ள உரிமையும், அங்கீகாரமும், பொருளாதார மேம்பாடும் அன்று கிடைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஊதிய பற்றாக்குறை இருந்த போதும், சமூக முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு அதிகம் இருப்பதால் எதிர்ப்பு ஏதும் காட்டாமல் மெளனமாக இருந்தது ஆச்சரியமே!

ஜோட் ரிப்பேர்

அன்று பள்ளிக்கூடம் அரைநாள். நான் பள்ளியிலிருந்து வந்தபின் சுட்டெரிக்கும் பிற்பகல் வெயிலில், வயதான செருப்பு தைக்கும் தொழிலாளி எங்கள் வீட்டின் முன்பகுதியில் பப்பாளி மரத்தின்கீழ் அமர்ந்து செருப்பு தைத்துவிட்டு ரூ.5 கூலி பெற்றுக்கொண்டார்.
கடுமையாக வியர்வை நாற்றம் வீசும் அளவிற்கு அவர் வெயிலில் சுற்றியுள்ளார். என் அம்மாவிடம், "காலையிலேர்ந்து பட்டினி.. ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பிட குடும்மா" என்று கேட்டார். அவருக்கு சிறிய வாழை இலையில் 4 பூரியும் கிழங்கும் வைத்து கொண்டுபோய் தந்துவிட்டு, "தாத்தா நிழல்ல வந்து சாப்பிடுங்க... மக்குல தண்ணி கொண்டுவரேன் கை கழுவிக்கோங்க, ரொம்ப அழுக்கா இருக்குல்ல" என்றேன். "இல்ல கண்ணு..அதுவரைக்கும் என்னால் தாங்கமுடியாது, இப்படியே உக்காந்து துன்றேன்" என்று அவசரப்பட்டார். உடனே அழுக்கு கையோடேயே அதை பிய்த்து சாப்பிட்டார். சொம்பில் குடிக்க தண்ணீர் கொண்டுபோய் கொடுத்தேன். கை கழுவிக்கொண்டு நீர் குடித்தபின் எஞ்சியதை முகத்தில் தெளித்துக் கொண்டார். தன் முண்டாசை கழட்டி முகத்தை துடைத்துக்கொண்டு பையையும் சாமானையும் தோளில் மாட்டிக் கொண்டு, வெயிலில் மெள்ளக் கிளம்பி நடந்துபோனார்.
செருப்பு தைத்து அழுக்கு அப்பிய கையோடே உண்ணத் துடிக்கும் நிலையில் ஒருவர் இருப்பார் என்றால் அது எப்பேர்பட்ட பசிப்பிணி! உழைக்கத் தயாராக இருந்தும், சக்தியின்றி ஏழ்மையின் பிடியில் அகப்பட்டவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். இறைவா, ஊழ்வினை எப்படியோ இருக்கட்டும் இவர்களுக்கு நித்தம் படி அளந்திடு!
Image may contain: one or more people and people sitting

திங்கள், 7 மே, 2018

துவாதச ருத்ர மாலா

ருத்ராக்ஷம் (ருத்ர +அக்ஷ = ருத்ரனின் நேத்திரம்) பற்றி ஏனோ திடீரென்று அழுத்தமான தாக்கம் இன்று ஏற்பட, உடனே 12 ருத்ர போற்றிகள் இயற்றினேன். சிவாயநம ஓம்!

யாரும் அறியாமல் வருவேன்...



பாரத தேச நாள்காட்டியில் நாம் இதுகாறும் பின்பற்றி வரும் கலியாண்டு என்பது கிமு 3102 ஆண்டில் தொடங்கியது என்று அறிவோம். ஏனென்றால் அந்த ஆண்டில்தான் கிருஷ்ணர் உடலை நீத்தார், அதனால் துவாபர யுகம் முடிந்து உடனே கலியுகம் பிறந்தது என்பார்கள். அதன்படி இன்றைக்கு கலியப்தம் 5119.
ஆனால் மகான்களுக்கும் ஜோசியர்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பூவுலகைவிட்டு போனபோது அது பிரஜோத்பதி வருடம் என்று மகான்கள் கூறியுள்ளனர். அதன்படி பார்த்தால் மேலே தீர்மானிக்கப்பட்ட ஆண்டு தவறு. அது கிமு 2930 ஆகும். அதாவது உண்மையான கலியாண்டு 172 ஆண்டுகள் பின்னேதான் பிறந்தது என்று வல்லுனர்கள் கூறியிள்ளனர். ஒரே தேசத்தில் இரு கலியாண்டுகள் என்பதை நாம் என்ன கண்டோம்?
அதன்படி பார்த்தால் கல்கியாக வரவுள்ள ஸ்ரீ வீரபோக வசந்தராயர் சேனையுடன் வர இன்னும் தாமதமாகுமே. "இந்த 1965-66 ஆம் ஆண்டை விட்டால் அடுத்த விஸ்வாவசு ஆண்டு 2025-26 தான் வரும். அவர் வருவது எப்போது என்பது அவருக்கே தெரிந்த பரம ரகசியம்' என்று என்னுடைய நூலில் சொல்லியிருந்தேன்.
"கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும்போது, கல்கியின் அவதாரம் ஸ்ரீசைலத்தில் தன் பரிவார சேனைகளோடு களத்தில் இறங்குவார்" என்று சொல்லப்படும் வருடம் 2025. அதுபோல் மகர ராசியில் குரு வரும்போது தீ மழை பொழியும், மகாயுத்தம் அணுகுண்டு பிரளயம் நடக்கும் என்றும் தீர்க்கதரிசனம் உள்ளது. அது 2044.
Image may contain: textஏன் கல்கியின் வருகையை பஞ்சாங்க கணிதக்ஞர்கள் முன்பின்னாக சொல்லியுள்ளனர் என்றால் அதுவும் இறை சித்தமே. "தர்மம் காக்க எடுக்கும் அவதாரத்தின் பிறப்பு விவரத்தை ஆராய முடியாது, அது ஒருநாளும் வெளிப்படாது" என்று மகாவிஷ்ணு உரைத்தார். இதைத்தான் பைபிளில், தேசலோனிக்கேயர் 5:2 "இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்" என்று சொல்கிறது.
ஆக, கலியாண்டு எதுவாகவோ இருக்கட்டும், தர்மராஜர் படை திரட்டி வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிகிறது.


ஞாயிறு, 6 மே, 2018

'நீட்' தேர்வு

NEET - Never Ending Embarrassment Test
'நீட்' தேர்வு எப்போதும்போல தமிழக மாணவிகளுக்கு தலைவலியாகவே இம்முறையும் வந்தது. உளவு பார்த்து தளவாடங்களை திருடியவனைக்கூட இப்படி சோதனை போட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. காது, மூக்கு, தலைமுடி, ஆடைகள் என அனைத்தையும் ஸ்கேன் செய்துமுடித்து, அவரை சாமியாடிவிட்டு வந்து நிற்கும் பெண்போல் ஆக்கி விட்டதுதான் கொடுமை. இப்படிச் செய்தால் எப்படி இயல்பாக தேர்வு எழுத மனம் இலயிக்கும்? போக்குவரத்து நெரிசலால் தாமதமாக வந்தவர்களை  கேட்டிற்கு வெளியே வெயிலில் நிற்க வைத்து எப்படி எல்லாம் சித்திரவதை செய்ய முடியுமோ அதை செய்துள்ளது இந்த CBSE வாரியம். பன்மடங்கு பெரிய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளே அமைதியாக நடைபெறும்போது, இந்த நீட் தேர்வு மட்டும் ஏன் இப்படி கபளீகரம் ஆகிறது? இத்தேர்வில் high level frisking செய்யும் அளவிற்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்று எனக்குத் தெரியவில்லை. இதைபார்க்கும் அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றனவோ?
Image may contain: 1 person, text
Image may contain: 1 person, standing and text

சனி, 5 மே, 2018

சீக்கியம் காட்டும் நல்வழி

என் கண்ணோட்டத்தில் சீக்கிய மதம் நிறைய நல்ல நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. ஏன், இந்து மதத்தில் என்ன இல்லை, அதில் இல்லாதவையா? என்று உங்கள் மனம் இக்கணம் என்னைக் கேட்க நினைக்கும். உண்மை நம் மதத்தில் எல்லாமே வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுதினமும் செயல் முறையில் இவை எல்லாவற்றையும் நாம் கடைப்பிடிப்பதில்லை என்பதை ஷண்மதம் போற்றும் நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
நான் படித்த பள்ளி மற்றும் கல்லூரி அந்த சீக்கிய மத சூழலில் இருந்ததால் இதெல்லாம் எனக்குப் பிடித்தது என்று சொல்லவும் முடியாது. உண்மையிலேயே, சகோதரத்துவமும், பரோபகாரமும் இம்மதத்தினரிடம் நான் கண்டேன். மனதால் வாக்கால் உடலால் இவர்கள் தீமைசெய்ய முன்வர மாட்டார்கள். அதைத்தாண்டி செய்தால் அது விதி, வினைப்பயனே.
அனைத்து குருத்வாரா கோயில்களிலும் காலணிகள் கழட்டி அதற்கென இடத்தில் வைத்துவிட்டு, கால்களை நீரில் கழுவியபின், தலையில் கைக்குட்டையோ/துணியோ பக்தி/மரியாதை வெளிப்படுத்தும் விதமாக போட்டு மறைத்துக்கொண்டு ‘குரு க்ரந்த சாஹிப்’ நூல் வைத்துள்ள மைய மண்டபத்தில் வழிபடுவார்கள். 'ஜப்ஜி' - நாமஜெபம் செய்தபின் 'லங்கர்' என்ற பொது உணவுக்கூடத்திற்கு வருவார்கள்.
அங்கே தட்டை எடுத்துக்கொண்டு வந்து தரையில் வரிசையில் அமர்ந்து கொள்ள, சப்பாத்தி/ரொட்டி-தால், சோறு-லஸ்ஸி பரிமாறப்படும். சப்பாத்தியை மட்டும் நாம் கைநீட்டி வாங்கிக்கொள்ள வேண்டும். ஏன்? கூடையிலிருந்து அதை எடுத்துக் கொடுப்பவரின் முகத்தை உண்பவர் காணவேண்டும். வயிறு குளிர உணவிட்டவரை மானசீக நன்றியுடன் பார்க்கத்தான் இந்த முறை. இங்கே தள்ளுமுள்ளு இல்லை, மோதல் இல்லை. அமைதியாக நடக்கும். யாரும் இங்கே உணவை வீணாக்குவதில்லை (கூடாது) என்பார்கள். அதனால் வேண்டியதை மட்டும் பெற்றுக்கொள்ளலாம். உண்டபின் தட்டுகளை பொது இடத்தில் சுத்தம்செய்யப் போடுவார்கள்.
நம்மூர் கோயில்களில் இலையில் அன்னத்தை உருட்டித் தள்ளிக்கொண்டு போவார்கள். அது கொஞ்சம் வெளியே உருண்டுபோய் அடுத்த இலையிலும் விழும். அதற்கு தொன்னை பிரசாதம் எவ்வளவோ மேல்!
சீக்கியனாகப் பட்டவன் ஐந்து அனுஷ்டானங்களைப் பின்பற்றவேண்டும். அவை: கச்சா (பருத்தி உள்ளாடை), கேஷ் (வெட்டாத கேசம்), கர்ரா (சீப்பு), கங்கா (கங்கணம்), கிர்பான் (பாதுகாப்பு கத்தி). இன்று எல்லோரும் கத்தி வைத்துக்கொள்ள முடியாது. சில சீக்கிய மதகுருமார்கள் இதை வைத்திருப்பதை நாம் பார்த்துள்ளோம். சீக்கியர்கள் கடும் உழைப்பாளிகள். அவர்கள் சமூகத்தில் பிச்சைக்காரர்கள் யாருமில்லை. தினமும் உணவு வழங்கப்படுவதால் ‘உணவுக்காக யாசிக்கிறேன்’ என்று யாரும் சொல்லமுடியாது. யார் வேண்டுமானாலும் வந்து உணவருந்தலாம். சாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து, என்று ஏதுமில்லை. இங்கே சிறப்பு தரிசன சீட்டோ, முக்கியஸ்த பக்தர்கள் என்றோ எதுமில்லை. அனைவரும் சமம்! நீங்களும் ஒருமுறை போய்வாருங்கள்.


வெள்ளி, 4 மே, 2018

Presidents come and go!

In the late 80s, I remember as a schoolboy, the then President Giani Zail Singh once visited our school/college auditorium and planted a sapling. Whenever we played sports, the football scaled a distance and precisely targeted the plant. The caretaker of the auditorium who stayed at the rear end used to shout at us. Sometimes the ball got mixed up in the rubbles of bones in the adjoining burial ground and was retrieved only to get smeared with burnt ashes. I am not sure if the burial ground exists now opposite Rane (Madras).
The auditorium was big enough to accommodate the whole school and college during examinations. When I studied, the school and college functioned in the same building. My 9th standard classroom and the seat where I once sat became my favourite seat even years later it became the classroom for BSc (Physics) - III year. I enjoyed the serene nature in the midst of green wild. Soon after the rains, we were engulfed in the herbal air that was strong to inhale. Today the school has its own building, college is autonomous and co-ed. The auditorium has been reconstructed.
In today’s newspaper, I read that our President Mr.Ramnath Govind is going to attend the Annual Convocation Day at Gurunanak College. Your Excellency, welcome to my alma mater. Is there any idea of planting a tree sapling at the newly constructed Guru Amardas Block Auditorium?
Image may contain: 2 people, beard, hat and closeup

வியாழன், 3 மே, 2018

அடி ஆத்தாடி.!

பொதுவாகவே வேலைக்கு விண்ணப்பிக்கும் பலபேர் தங்கள் Resumeல் பணிக்காலம், கல்வித் தகுதி, ஊதியம் போன்ற விஷயங்களில் பிசிறு ஒட்டவைத்த நகாசு வேலைகள் செய்வதுண்டு. ஆனால், ஒரு அமெரிக்க பெண்மணி போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மொத்தமாகவே ஒரு பெரிய நிறுவனத்தை மோசடி செய்துள்ளது சென்ற வாரம் வெளியானது.
சிண்டி, வயது 41, அமெரிக்காவின் லுயிசியனா மாகாணத்தைச் சேர்ந்தவர். லிங்க்டு-இன் வலை தளத்திலிருந்து பெரிய பதிவியில் உள்ள பெண்ணின் ரெஸ்யூமை காப்பி அடித்து, ஓட்டுனர் உரிமம் மற்றும் சமூக பாதுகாப்பு இலக்கத்தையும் திருடி அதை வைத்து போலி அடையாள அட்டை தயார் செய்து, அதற்கேற்ப கச்சிதமாய் நடித்து Diversified Foods & Seasonings, Inc. என்ற நிறுவனத்தில் மனிதவள மேலாளராக பணியில் சேர்ந்தார்.
LinkedIn வலைத்தளம் என்பது வேலையிலுள்ள Professionals க்காக நிறுவப்பட்ட ஒரு சமூக தளம் என்றாலும் அதையே நம்பிக்கொண்டு யாரையும் நாம் வேலைக்கு எடுக்கமுடியாது. நான் என்றுமே அதை நம்புவதில்லை. வலைப்பின்னலில் உள்ளவர்கள் எல்லோருமே பரஸ்பரம் testimonial போட்டுக்கொள்வதுண்டு. அதில் அவதூறு, இகழ்ச்சி, போன்ற எதுவுமே அநேகமாக இடம் பெறாது. ஒரே புகழாரம்தான்!
முன் அனுபவம் ஏதுமில்லாத சிண்டி சாதுர்யமாக தன்னை எதிலுமே பட்டுக்கொள்ளாமல் தளுக்காக பணியை தள்ளிக்கொண்டிருந்தார். இவர் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை இந்த லட்சணத்தில் அடுத்த ஆறு மாதத்திற்குள் பணி உயர்வு கிட்டியது. ஆண்டு சம்பளம் $105,000. பிறகுதான் அம்மையார் சொதப்புவதும், பணியில் அடிப்படை வேலைகள்கூட செய்வதில் திணறுவதும் அவர்கீழ் வேலைசெய்யும் சக ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது மேலிடத்திற்குப் போக, பிறகு விசாரணை நடக்க, எல்லா உண்மைகளும் அம்பலமானது. பலநாள் திருடி ஒருநாள் அகப்பட்டாள்!
அதுவரை $56,209 ஊதியம் ஏழு மாதங்கள்வரை வாங்கியது சட்டப்படி குற்றம் என்று நீதி மன்றம் சொல்ல, இவருடைய வக்கீல், 'இவர் வேலையில் இருந்ததால் கம்பனி ஊதியம் கொடுத்தது, இவர் பெற்றார். இதில் என்ன குற்றம்? பணிக்கு எடுக்குமுன் Background check செய்துவிட்டு எடுத்தபின் இப்போது அவதூறு சொல்வது சட்டப்படி குற்றம்' என்று வக்காலத்து பேசினார். ஆனால் எதுவாயினும், அப்பெண்மணி செய்தது மாபெரும் குற்றம் என்று சொல்லி, பத்து ஆண்டுகள் சிறைவாசம் பெற்றுள்ளார். அங்கேயே இந்த நிலை என்றால், இங்கே எந்த அழகில் நடக்கிறது என்பதை நான் அறிவேன்! Fake it till you make it.
No automatic alt text available.

புதன், 2 மே, 2018

ஆதாரப் பண்

'பள்ளிவாசலில் ஒலிக்கும் வாங் ஓசை கிட்டத்தட்ட இந்த சாமவேத இசையைப் போல் இருக்கிறது. முகமது நபியாகப் பிறந்த போகர் தான் இஸ்லாமியருக்கு இந்த இசையை அறிமுகப் படுத்தியிருப்பார் போலிருக்கு." என்று நண்பர் ஒருவர் சொன்னார்.
அதுவே ஆதாரப் பண். அவருடைய ஒப்பீடு அருமை! நம் தமிழர்கள் மனதில் ஈசனும்-வேதமும் ஆரியமே என்று பதிந்து விட்டதால் அதை முற்றிலும் வெறுப்பார்கள். “வேதங்கள் தெரிழுதேத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே” என்று திருவாசகம் சொல்கிறது. அதாவது தில்லையில் வேதங்களனைத்தும் சிவபெருமானை தொழுதவாறு உள்ளன என்கிறார் மணிவாசகர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த வேதத்தை காலையில் கருவறையில் பாடவேண்டும் என்று வலியுறுத்தியது ஏன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். தேவாரப் பாடல்கள் அருளியவர்கள் வேண்டுமென்றே வேதத்தை உயர்த்திபேசி தமிழை இகழந்து பொய்யுரைத்தார்களா? நாம்தான் சிந்திக்க வேண்டும். "சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை மந்திரிப்பார் மனத்துளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே." (திருமுறை 6.50.4). இதே கருத்தை திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் தத்தம் பதிகங்களில் பாடியுள்ளனர். இவர்களே எதிர்க்காத ஈசனை, வடமொழியை, வேதத்தை தமிழர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?🤔.
சிவபெருமான் கயிலாயமா /தென்னாடா என்று அவனை கூறு போட்டுப் பார்த்த விளைவுதான் இது. அப்போதைய லெமுரியாவில் தமிழ்ச்சங்கம் வளர்த்ததாகட்டும், சேயோன் முருகன் குறிஞ்சி நில ஆதிகுடியில் தமிழ் பரப்பியதாகட்டும், இதற்கும் வடமொழி வேதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. இங்குதான் எல்லோரும் குழம்பிக்கொண்டு ஈசனை/ வேதத்தை வேற்றுமையோடு பார்க்கிறார்கள். ஆக, பக்தி நெறியில் மொழிக் கலகம் வருவது ஏன்? 'நான் ஆதிகுடியோன் என்றால் நான் பேசும் மொழியில் அவன் ஏன் படைக்கவில்லை?' என்ற கோபம் தெரிகிறது. இதற்கு நவபஞ்ச (14) முறை உடுக்கை அடித்த நடராஜன்தான் பதிலளிக்க வேண்டும். தொல் மொழி ஆய்வு என்ற கோணத்தில் புரட்சிகர திராவிட ஆர்வலர்கள் 'தில்லையில் அம்பலம் என்ற ஒன்று இருந்ததே இல்லை. அங்கு ரிஷிகளும்/சித்தர்களும் வழிபடவில்லை. அது புத்த விகாரமாக இருந்ததாம். ஆகவே ஐம்பூதம், நடராஜர், வேதங்கள், திருமூலர், வடமொழி, எல்லாமே ஆரிய கதைகள்' என்று தங்கள் ஆசை தீர வேள்வியில் நெய் ஊற்றி ஊதி விட்டனர். ஈசனையும் வேதங்களையும் உயர்த்திப் பேசும் தேவாரத்தைத் தூற்றினர். மொழியை ஆராய்கிறேன் என்று சொல்லி இறுதியில் ஈசனின் முகத்தில் கைவைக்கத் துணிந்தனர். 👿🤭.
இறையைத் தாண்டி மொழி நிந்தனை வலுக்கிறது என்றால் அது கடவுள் நம்பிக்கை இல்லாத சில தமிழர்களின் கருங்கூவல் என்று தெரிகிறது. சுயம்பனான ஈசன் ஏன் வேதத்தை வடமொழியில் படைத்தான்? மொழி பிரச்சனைக்கு அவன்தான் காரணம் என்று முற்போக்கு தமிழர்கள் வெறுப்பார்கள். சாமவேதம் இசைப்பதை ஏற்கமுடியாதோர் சமயக் குரவர்களை 'ஆரிய' வந்தேறிகள் எனப் பெயரிட்டுச் சாடினாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு வெறுப்புத் தீ இங்கே எரிகிறது. எல்லா மொழிகளும் அவன் அருளால் வந்தவை. அரசியல்/பூகோள ரீதியல் முட்டி மோதிக்கொள்வோர் போகட்டும், நமக்கு யாதொரு நட்டமுமில்லை. எம்மொழியும் நமதே!

செவ்வாய், 1 மே, 2018

மதத்தில் மறைந்தது மாமத...

"எதிர்காலத்தில் ஷண்மார்க்க மதங்கள் ஒன்றுபட்டு ஒரு பெயரோடு விளங்கும்' என்று காலக்ஞானம் நூலில் ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் சொன்னார். அது 'இந்து' மதம் என்று பிற்பாடு வந்தது.
ஆனால் இன்றைக்கு ஒரே சமய மார்க்கத்தின் கீழ்வரும் ஒவ்வொரு பிரிவுகளும் தனித்தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்வது எப்படி என்று புரியவில்லை.
கன்னட பசவண்ணர் நிறுவிய வீரசைவ லிங்காயத் பிரிவும்; சாமித்தோப்பு வைகுண்டர் அய்யா வழியும்; வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அருட்பெரும் ஜோதியும், ஷண்மதத்திற்குள் வந்து விடுகிறதே! தனி போதனைகள் பின்பற்றும் எல்லா பிரிவுகளையும் தனி மதம் என்று அறிவிப்பது எதற்கு? ஒன்றும் விளங்கவில்லை. Hinduism கீழ் வரும் அத்தனை பிரிவுகளும் பஞ்சமுக பிரம்மத்திலிருந்து வந்ததே! எல்லாமே அதனுள் அடங்கிவிடுகிறது.
ஐக்கியப்பட்ட ஷண்மார்க்கத்தில் இருந்து கொண்டு நாத்திகம் பேச விதியில்லை என்பதால் 'கடவுள் மறுப்பு' என்று பெரியார் ஈவேரா சுவாமிகள் நிறுவிய நெறியை தனிமதமாக அறிவிக்க வேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.
"நான் வரும்போது மற்ற சில்லறை மதங்கள் மறைந்து போய்விடும்" என்று காலக்ஞான நூலில் அவர் சொல்லியுள்ளார். அதாவது அவை தனியாக இயங்காமல் ஆதார மதத்தினுள் மறைந்துவிடும் என்று பொருள் கொள்ளலாம். 

'சுத்த சித்த சச்சிதானந்த சன்மார்க்க சமத்துவ சத்சங்கம்' என்ற ஒரு புது இயக்கத்தை தொடங்கிடலாமா? பேர்கூட டக்கரா இருக்கு.!

Image may contain: text

அழகு மலர்


 No automatic alt text available.

வண்ணம் நிறைந்த ஓவியமோ
கைவண்ணம் தந்த காவியமோ
மலரல்ல வண்ண ஓவியமல்ல
மலரந்த பூக்களில் இதழ்களல்ல
தலையும் உடலும் நளினமாக்கி
தத்ரூபமாக அமர்ந்த மனிதர்கள்

முதல்முறை மலரென ஏமாந்தும்      
மறுமுறை பார்த்தபின் வியந்தும்
கலைமீது கலையாத நேசத்தோடு
குறுக்கி வருத்தி தலைவணங்கி  வட்டத்தில் அமர்ந்த இவர்களை  
வாழ்த்தாமல் இருக்க முடியுமோ?

-எஸ்.சந்திரசேகர்